நெல்லையில் கொலை திட்டம் தீட்டிய இருவர் கைது
நெல்லை: ரவுடியை கொன்றவர்களை பழிக்குபழி வாங்க ஆயுதங்களை சேகரித்து கொலை திட்டம் தீட்டிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை சேர்ந்த ரவுடிகள் மதன், அய்யப்பன் உள்ளிட்ட 3 பேரை கடந்த ஜனவரி மாதம் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 13 பேரை கைது செய்தனர்.
நிபந்தனை ஜாமீனில் வந்த இவர்கள் மதுரை தல்லாகுலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். இவர்களை கொலை செய்வதற்கு மதன் ஆதரவாளர்கள் சிலர் திட்டமிட்டு 13 கூஜா வெடிகுண்டுகளை தயாரித்து வைத்திருந்தனர். தகவல் அறிந்த போலீசர் கூஜை வெடிகுண்டுகளை கைப்பற்றி சதி திட்டத்தை முறியடித்தனர்.
இதையடுத்து அந்த கும்பல் மதன் கொலையில் தொடர்புடைய முக்கிய புள்ளி ஒருவரின் தந்தையான கசமாடன் என்பவரை கடந்த ஜூன் மாதம் சுத்தமல்லியில் வைத்து கொலை செய்தது. இக்கொலையிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் பழிவாங்க திட்டமிட்டு சதி வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக ரவுடி மதன் ஆதரவாளர்கள் அவன் கொல்லப்பட்ட ஜன 11ம் தேதி 5 பேரை கொலை செய்ய திட்டமிட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார், இதில் தொடர்புடைய சுத்தமல்லியை சேர்ந்த பாண்டி மகன் மாயாண்டி, மாடக்கண்ணு மகன் இசக்கி பாண்டி ஆகியோரை கைது செய்து அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
கைதான இசக்கிபாண்டி நெல்லையில் உள்ள கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.