பென்னாகரம் இடைத் தேர்தலில் மாற்றமில்லை - நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தல் திட்டத்தில் மாற்றம் இல்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து நாளை திட்டமிட்டபடி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
பொங்கல் பண்டிகைக் காலத்தில் இடைத் தேர்தலை நடத்தாமல், பிப்ரவரியில் நடத்த வேண்டும் என பாமகவும், அதிமுகவும் தேர்தல் ஆணையத்தைக் கோரியிருந்தன.
இருப்பினும் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளை திட்டமிட்டபடி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை வேட்பு மனுத்தாக்கல் துவங்குகிறது. ஜனவரி 3ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.
4ம் தேதி மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 6ம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெற விரும்புவோர் பெறலாம். ஜனவரி 20ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
இந்தத் தேர்தலில் போட்டியிட இதுவரை திமுக சார்பில் மட்டுமே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.