போப்பாண்டவரை தள்ளி விட்ட மன நலம் பாதித்த பெண்- வாடிகனில் பரபரப்பு
இதுகுறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் சிரோ பெனிடிட்டினி கூறுகையில், செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகாவில் போப்பாண்டவர் கிறிஸ்துமஸ் உரை நிகழ்த்த வந்து கொண்டிருந்தார்.
அப்போது பார்வையாளர் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் தடுப்புகளைத் தாண்டி வந்து போப்பாண்டவர் மீது மோதி தள்ளி விட்டார். இதனால் நிலை குலைந்த போப்பாண்டவர் தடுமாறி விழுந்தார்.
இருப்பினும் அவர் சட்டென சுதாரித்து எழுந்து விட்டார். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. பின்னர் அவர் தொடர்ந்து சென்று உரை நிகழ்த்தும் இடத்தை அடைந்தார்.
போப் மீது மோதிய பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிகிறது. அவர் வாடிகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போப் மட்டுமல்லாமல் கார்டினல் ரோஜர் எட்சிகரே என்பவர் மீதும் அப்பெண் மோதி தள்ளி விட்டார். கீழே விழுந்த கார்டினல் எட்சிகரே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றார்.
இந்த திடீர் சம்பவத்தால் வாடிகனில் பரபரப்பு ஏற்பட்டது.