கேரளாவுக்கு தமிழகத்திலிருந்து மீண்டும் பால் சப்ளை
திருவனந்தபுரம்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேரளாவின் மில்மா நிறுவனத்திற்கு, தமிழகத்தின் ஆவின் நிறுவனம் பால் சப்ளை செய்யத் தொடங்கியுள்ளது.
கேரள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சம்மேளனம்தான் மில்மா. அதேபோல தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சம்மேளனம் ஆவின்.
சமீபத்தில் இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மில்மாவுக்கு, ஆவின் நிறுவனம் தினசரி 1 லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் பால் வழங்க வேண்டும்.
இதற்கு முன்பும் மில்மாவுக்கு, ஆவின் நிறுவனம் பால் சப்ளை செய்து வந்தது. ஆனால் கடந்த 2007ம் ஆண்டு பால் பற்றாக்குறை என்று கூறி மில்மாவுக்கான சப்ளையை தமிழகம் நிறுத்தியது.
இதையடுத்து கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவை நாடி பால் வாங்கி வந்தது மில்மா.
இந்த நிலையில் தற்போது தமிழகத்திடமிருந்து மீண்டும் பால் பெறத் தொடங்கியுள்ளது மில்மா.
இதுகுறித்து மில்மா அதிகாரி ஒருவர் கூறுகையில், சமீப காலமாக மகாராஷ்டிராவிடமிருந்து பால் பெற்று வந்தோம். ஆனால் அங்கு பால் உற்பத்தி பெருகவில்லை. இதையடுத்து வேறு வாய்ப்புகளை பார்த்து வந்தோம்.
தற்போது தமிழ்நாடு பால் தரத் தயாராக இருப்பதால் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.
தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகியவற்றில் உள்ள பால் பண்ணைகள் மூலம் மில்மாவுக்கு பால் அனுப்பி வைக்கப்படும்.
இருப்பினும், மில்மா, ஆவின் ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரைக்கு மட்டுமே போடப்பட்டுள்ளதால், வேறு எங்கிருந்து பால் பெறலாம் என்ற தேடுதலில் மில்மா தீவிரமாக இறங்கியுள்ளதாம்.
கேரளாவுக்கு தற்போது மகாராஷ்டிரா 30 ஆயிரம் லிட்டர் பாலும், கர்நாடகா 2 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பாலும் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் கறவை மாடுகள் மிக மிகக் குறைவு. இதனால் அங்கு பால் உற்பத்தி சரிவர இல்லை. இதனால்தான் கேரள அரசு அக்கம் பக்கத்து மாநிலங்களிலிருந்து பாலை இறக்குமதி செய்து வருகிறது.