வாஜ்பாயுடன் கருத்து வேறுபாடு-அத்வானி ஒப்புதல்

வாஜ்பாயின் 86வது பிறந்த நாளையொட்டி அவரைப் பற்றிய தனது கருத்துக்களை ஒரு பத்திரிகையில் கட்டுரையாக எழுதியுள்ளார் அத்வானி.
அதில் அத்வானி கூறியிருப்பதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இயக்கத்தில் பாஜக நேரடியாக ஈடுபடுவதை வாஜ்பாய் விரும்பவில்லை. ஆனால், கட்சியில் பெரும்பாலானோர் அயோத்தி விவகாரத்தில் கட்சி நேரடியாக தொடர்புபடுத்திக் கொள்வதை ஆதரித்தனர். இதனால் வாஜ்பாய் பெரும்பாலானோரது கருத்துக்கு தலை வணங்கி அந்த யோசனையை ஏற்றுக்கொண்டார். வாஜ்பாய் மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
அதேபோல குஜராத்தில் கோத்ரா மதக் கலவரத்தைத் தொடர்ந்து முதல்வர் நரேந்திர மோடியை பதவி விலக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களில் வாஜ்பாயும் ஒருவராக இருந்தார்.
ஆனால், நான் குஜராத்தில் பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்தேன். மோடி மீது வேண்டுமென்றே புகார் கூறப்படுகிறது என்பதை அறிந்தேன். அதை வாஜ்பாயிடம் எடுத்துக் கூறி அவரை சமாதானப்படுத்தினேன்.
வாஜ்பாய் எப்போதுமே கொள்கையை விட்டுக் கொடுக்காத ஒரு மனிதர். அவரது பேச்சாற்றால் மிகச் சிறப்பானது. என்னை அது மிகவும் பாதித்துது. அதனால் எனக்கு தாழ்வு மனப்பான்மை கூட இருந்தது. இதனால் பல ஆண்டுகள் நான் கஷ்டப்பட்டேன். பொதுக் கூட்டங்கள் பேசுவதைக் கூட தவிர்த்து வந்தேன்.
நான் கட்டுரைகள் எழுதுவேன், தீர்மானங்களை தயார் செய்வேன். ஆனால், பொது நிகழ்ச்சியில் பேசுவதில் எனக்கு தயக்கம் இருந்தது. 1972ம் ஆண்டு கட்சித் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டபோது அந்த தயக்கம் எனக்கு மிகப் பெரிய தடையாக இருந்தது.
1990ம் ஆண்டில் நான் மேற்கொண்ட அயோத்தி ரத யாத்திரை கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. குறிப்பாக காங்கிரசிக்கு மாற்றுக் கட்சியாக பாஜக வளர அது உதவியது.
ஆனால், கட்சியில் நான் தீவிரமானவன் என்றும் வாஜ்பாய் மிதவாதி என்று பத்திரிகைகள் பச்சை குத்திவிட்டன. வாஜ்பாய் மிதவாதி என்ற அடையாளும் நான் தீவிரவாளர் என்ற அடையாளமும் கட்சி வளர்ச்சிக்கு உதவியதாக கட்சியில் ஒரு பிரிவினர் கூட கருதினர் என்று கூறியுள்ளார் அத்வானி.
நேற்று வாஜ்பாயின் 86வது பிறந்த தினத்தையொட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் அத்வானி.
முன்னதாக குஜராத் வன்முறையைக் கட்டுப்படுத்த மோடி தவறிவிட்டார் என்று கட்சி சகாகளிடம் வாஜ்பாய் கூறியதாக கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி பத்திரிகை பேட்டி ஒன்றில் சமீபத்தில் கூறியிருந்தும், இதே கருத்தை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நீண்ட நாள்களாக நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய் தற்போது ஓரளவு குணமடைந்துள்ளார். இதையடுத்து கட்சியினரை அவர் சந்தி்க்க ஆரம்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications