திங்களுக்குள் தெலுங்கானா-இல்லாவிட்டால் காலவரையற்ற பந்த்: மத்திய அரசுக்கு கெடு
ஹைதராபாத்: திங்கள்கிழமை மாலைக்குள் தெலுங்கானா தனி மாநிலம் எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து உறுதியாக மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அன்று மாலை முதல் காலவரையற்ற பந்த் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று தெலுங்கானா போராட்ட கூட்டு நடவடிக்கைக்க குழு மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளது.
ஹைதராபாத்தில் தெலுங்கானா போராட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திராவில் மிகப் பெரிய அரசியல் நெருக்கடி நிலவுகிரது. கிட்டத்தட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் விலகி விட்டனர்.
எனவே மத்திய அரசு தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
தெலுங்கானா மாநிலக் கோரிக்கைக்கு வலுவான ஆதரவு உள்ளதால் அதை மத்திய அரசு செய்தாக வேண்டும்.
வருகிற திங்கள்கிழமை மாலைக்குள் (28ம் தேதி) மத்திய அரசு தெலுங்கானா தனி மாநிலம் எப்போது அமைக்கப்படும் என்பது குறித்த திட்டத்ததை, தெளிவாக, திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். இதை செய்ய மத்திய அரசு தவறினால், 29ம் தேதி முதல் காலை முதல் தெலுங்கானா முழுவதும் காலவரையற்ற பந்த் போராட்டம் தொடங்கும்.
திங்கள்கிழமை மாலை வரை மட்டுமே எங்களால் பொறுத்திருக்க முடியும். இதை செவிமடுக்க மத்திய அரசு தவறினால் தெலுங்கானா முழுவதும் மாபெரும் காலவரையற்ற பந்த் போராட்டம் தொடங்குவதைத் தவிர்க்க முடியாது.
தெலுங்கானா தனி மாநிலத்தை குறித்த காலத்திற்குள் உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தெலுங்கானாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார் ராவ்.
தொடரும் வன்முறை
திங்கள்கிழமை வரை கெடு விதித்துள்ளதால் அன்று மாலை வரை பந்த் போராட்டம் நடைபெறாது என்றும் கூட்டு நடவடிக்கைகக் குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும், தெலுங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
கரீம்நகர், மேடக் மாவட்டங்களில் ஆங்காங்கு வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
வெலுலவாடா நகரில் தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது. ராமகுண்டம் பகுதியில் நீர்ப்பாசனத் துறை அலுவலகம் தாக்கப்பட்டது.
வாரங்கலில் காகதீய பல்கலைக்கழக மாணவர்கள் தெலுங்கு தேசம் தலைவர்களின் கொடும்பாவிகளை பாடைகளில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
கருப்பு பேட்ஜ் அணிந்த அரசு ஊழியர்கள்
இன்று முதல் அரசு ஊழியர்களும் தெலுங்கானாவுக்கு ஆதரவாக கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் இணைந்துள்ளனர். அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர்.
மேலும், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
தெலுங்கானா போராட்டத்தால் ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதுவரை அந்தக் கழகத்திற்கு ரூ. 120 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். போராட்டம் தொடருவதாலும், செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற பந்த் தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருப்பதாலும் போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
காலவரையற்ற பந்த் போராட்டம் நடைபெறும் என தெலுங்கானா போராட்டக் குழு அறிவித்துள்ளதால் தெலுங்கானா பகுதியில் பெருமளவில் துணை ராணுவத்தினரும், போலீஸாரும் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
சிபிஐ எம்.எல்.ஏக்களும் ராஜினாமா:
இந்த நிலையில் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த நான்கு சிபிஐ எம்.எல்.ஏக்களும் நேற்று ராஜினாமா செய்து விட்டனர்.
தங்களது ராஜினாமா கடிதங்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர் நால்வரும். இவர்களையும் சேர்த்து இதுவரை 84 தெலுங்கானா எம்.எல்.ஏக்கள் பதவி விலகியுள்ளனர். தெலுங்கானாவில் மொத்தம் 119 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமா குறித்து சிபிஐ மாநிலச் செயலாளர் நாராயணா கூறுகையில், கட்சியின் மத்திய தலைமையுடன் ஆலோசனை நடத்திய பின்னரே நான்கு எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
தனி அமைப்பை ஏற்படுத்திய தெலுங்கு தேசம்..
இந்த நிலையில், தனி தெலுங்கானா மாநில கோரிக்கை தொடர்பான பிரசாரத்திற்காக தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் தலைவர்கள் தெலுங்கானா சாதனா சமிதி என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இதன் ஒருங்கிணைப்பாளராக தெலுங்கு தேசம் பொலிட்பீரோ உறுப்பினர் நகம் ஜனார்த்தன ரெட்டி இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த தலைவர்களான மண்டவ வெங்கடேஸ்வர ராவ், நரசிம்மலு, தயாகர் ராவ், தேவேந்தர் கெளட், போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மேலும் தெலுங்கானா போராட்ட கூட்டு நடவடிக்கைக் குழுவிலிருந்து தெலுங்கு தேசம் விலகியுள்ளது. மாறாக தனி மாநிலம் கோரி தனியாக போராட அது முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்தே புதிய அமைப்பை அது தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications