சர்ச்சையில் சிக்கி சரிந்த, எப்படி இருந்த திவாரி..!

ஏபிஎன் ஆந்திரஜோதி என்ற தனியார் தொலைக்காட்சி சானல் இந்த செய்தியை நேற்று வீடியோவுடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இந்த வீடியோ செய்திக்கு உடனடியாக தடை விதித்து விட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி எனப்படும் நாராயண் தத் திவாரி. இவர் உ.பி. முதல்வராக 3 முறையும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் முதல்வராகவும் இருந்தவர்.
இவர் பெண் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. முன்பு டெல்லியைச் சேர்ந்த ரோஹித் சர்மா என்ற இளைஞர் திவாரி மீது வழக்கு தொடர்ந்தார்.
அதில், எனது தந்தை என்.டி.திவாரி. அவருக்கும், எனது தாய்க்கும் இடையில் ஏற்பட்ட உறவில்தான் நான் பிறந்தேன். எனவே என்னை திவாரியின் மகனாக அறிவிக்க வேண்டும் என்று கோரினார்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த திவாரி, ரோஹித்தின் தாயார் உஜ்வாலா சர்மா தவறானவர். அவருடைய தூண்டுதலின்பேரில்தான் ரோஹித் சர்மா என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறியிருந்தார்.
இருப்பினும் இந்த வழக்கு கால தாமதமாக தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி உயர்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் தப்பித்தார் திவாரி.
இந்த நிலையில், ராஜ்பவன் படுக்கை அறையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கினார் திவாரி.
ஏற்கனவே தெலுங்கானா காரணமாக கொதிப்பில் இருக்கும் ஆந்திராவில் திவாரி பிரச்சினை புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று காலை இந்த வீடியோ செய்தி வெளியானதைத் தொடர்ந்து ராஜ்பவன் நோக்கி பெண்கள் அமைப்பினர், தெலுங்கு தேசம் கட்சியினர் படையெடுத்து போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பெண்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
திவாரி குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்த ராஜ்பவன் உடனடியாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில் ஆந்திர ஜோதி டிவியில் காட்டப்படுவது திரிக்கப்பட்ட உண்மைக்குப் புறம்பான காட்சிகள். ஆளுநரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி. உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதையடுத்து படு வேகமாக செயல்பட்ட ஆந்திர உயர்நீதிமன்றம், அந்த செய்தியை ஒளிபரப்பவும், வீடியோவைக் காட்டவும் ஆந்திர ஜோதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆந்திர ஜோதி வீடியோ படத்தைக் காட்டுவதை நிறுத்தியது.
அந்தக் காட்சி...
ராஜ்பவன் மாளிகையின் படுக்கை அறையில் இந்தக் காட்சி விரிகிறது. இரவு நேரத்தில் இது படமாக்கப்பட்டுள்ளது. என்.டி.திவாரி படுக்கை அறையில் உட்கார்ந்துள்ளார். அவருக்கு அருகில் 3 பெண்கள் உள்ளனர்.
அவர்களில் ஒரு பெண்ணுக்கு 18 வயது என்று கூறப்படுகிறது. திவாரியின் வயது 87 ஆகும். இன்னொரு பெண் கர்ப்பிணி என்று கூறப்படுகிறது.
ஒரு காட்சியி்ல் படுக்கையில் படுத்துக் கிடக்கிறார் திவாரி. அவரை ஒரு பெண் உடலில் ஆடையின்றி முத்தம் கொடுக்கிறார். இன்னொரு காட்சியில் வாயோடு வாய் வைத்து முத்தமிடுகிறார். மற்றொரு காட்சியில் அவரது காலுக்குக் கீழ் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறார்.
ஆளுநர் பதவிக்குரிய கெளரவத்தை கெடுக்கும் வகையில், மகா களங்கமாக அமைந்துள்ளது இந்த காட்சிகள்.
அம்பலப்படுத்திய ராதிகா...
திவாரியின் இந்த செக்ஸ் ஊழலை அம்பலப்படுத்தியவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் ஆவார்.
ராஜ் பவன் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் திவாரிக்காக தான் இந்தப் பெண்களை அனுப்பி வைத்ததாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், திவாரிக்கு பெண் மோகம் அதிகம். அவருக்காக நான் பல பெண்களை அனுப்பி வைத்துள்ளேன். அனைவரும் ராஜ்பவன் வேலைக்காக என்று கூறி சேர்க்கப்படுவர். ஆனால் அவர்களை திவாரிதான் தனது இச்சைகளுக்குப் பயன்படுத்தி வந்தார்.
எந்த நேரத்தில் அவர் பெண் வேண்டும் என்று கேட்பார் எனக் கணிக்கவே முடியாது. திடீரென நள்ளிரவில் கேட்பார், சில சமயம் மதிய உணவை முடித்ததும் கேட்பார்.
எனக்கு கடப்பாவில் சில கல்குவாரிகளை நடத்த விருப்பம் இருந்தது. இதற்காக லைசென்ஸ் வாங்கித் தருவதாக திவாரி உறுதியளித்திருந்தார். ஆனால் சொன்னபடி அவர் செய்யவில்லை. இதையடுத்தே இந்த வீடியோ படத்தை அம்பலப்படுத்தி ஆந்திரஜோதிக்குக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார் ராதிகா.
சமீபத்தில் எடுக்கப்பட்ட காட்சி
ராதிகா ஏபிஎன் ஆந்திரஜோதி டிவிக்கு அளித்துள்ள திவாரி தொடர்பான வீடியோ காட்சிகள் சமீபத்தில்தான் படமாக்கப்பட்டதாம்.
திவாரியால் தனது காரியம் நடக்காத கோபத்தில், பெண்களை அவரிடம் அனுப்பியபோது ரகசிய கேமராவால் அதை படமாக்கி விட்டார் ராதிகா. பின்னர் சிடியில் அதைப் போட்டு ஏபிஎன் தொலைக்காட்சிக்கு கொடுத்து விட்டார்.
இதுகுறித்து ஏபிஎன் தொலைக்காட்சி நிறுவனத்தாரிடம் சிடியுடன் அணுகிய ராதிகா, அவர்களிடம், நான் கடந்த ஒரு மாதமாக ஆந்திர கவர்னர் மாளிகைக்கு பெண்களை அனுப்பி வந்தேன். இந்த சி.டி.யில் பதிவான செக்ஸ் காட்சிகள் சமீபத்தில் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
அவர் கொடுத்த காட்சிகளைப் பார்த்த ஏபிஎன் தொலைக்காட்சியினர், அதில் இருப்பது திவாரிதான் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு அதை வெளியிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, வீடியோவை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆந்திரஜோதி டிவி எடிட்டர் ராதாகிருஷ்ணா கூறுகையில், உண்மையில் ஆந்திராவுக்கும், ராஜ்பவனுக்கும் களங்கத்தையும், அவதூறையும் ஏற்படுத்தியவர் திவாரிதான். நாங்கள் அல்ல. இதுபோன்ற செயலில் ஈடுபட்ட திவாரிதான் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
கதவை மூடிய சபீதா ரெட்டி...
இந்த சம்பவம் குறித்து ஆந்திர அரசு இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்க முயன்றபோது வேகமாக தனது காரின் கதவை மூடியபடி கிளம்பிச் சென்று விட்டார் ரெட்டி.
திவாரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரஜோதி டிவியில் காட்டிய காட்சிகள் மிகவும் அசிங்கமானவை, ராஜ்பவனுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் திவாரி. ஆந்திராவுக்கு பெரும் அவமானத்தைத் தேடித் தந்து விட்டார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.
இதேபோல திவாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பல்வேறு மகளிர் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. அதுவரை போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அவை கூறியிருந்தன.
திவாரிக்கு எதிராக சித்தூர், நெல்லூர், கம்மம், அடிலாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.












Click it and Unblock the Notifications