கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்திய ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு
நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்தியதாக ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
சேலத்தை சேர்ந்த என்ஜீனியரிங் கல்லூரி மாணவர்களான சுயம்புராஜன், மோகன் உள்ளிட்டோர் காரில் சபரி்மலை யாத்திரை புறப்பட்டனர். கன்னியாகுமரிக்கு காரில் சென்றுவிட்டு பழவூர் வழியே வந்து கொண்டிருந்தது. சேலத்தை சேர்ந்த சரவணன் காரை ஓட்டினார்.
அப்போது குன்னூர் வெலிங்டனை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விவேக் கேயால், ராமசந்திரன் கேஸ்திரி உள்ளிட்டோர் குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.
ராமச்சந்திரன் கேஸ்திரி வந்த கார் மீது கல்லூரி மாணவர்கள் வந்த கார் எதிர்பாராத விதமாக உரசி விட்டது. இருப்பினும் கார் நிற்காமல் போய் விட்டது.
இதையடுத்து இரு ராணுவ அதிகாரிகளும், அந்தக் காரை விரட்டிச் சென்று, காவல்கிணறு ரயில்வே கேட் அருகே மறித்தனர். அங்கு மாணவர்களுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ராணுவ அதிகாரிகள் ராமசந்திரன் கேஸ்திரி, விவேக் கேயால் ஆகியோர் கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சுயம்புலிங்கம், மோகனுக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர் இரு தரப்பும் வள்ளியூர் போலீஸில் புகார் கொடுத்தனர். டிஎஸ்பி சுப்பையா, பணகுடி இன்ஸ்பெக்டர் சிவராஜ் பிள்ளை விசாரணை நடத்தினர். மாணவர்களைத் தாக்கியதாக ராணுவ அதிகாரிகள் மீதும், கார் மீது இடித்ததாக சரவணன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications