3 வயது சிறுமியிடம் சில்மிஷம்-வியாபாரி அடித்துக் கொலை
வந்தவாசி: 3 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரைக் கொலை செய்த சிறுமியின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம் (37). ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு பவித்ரா என்ற 3 வயது மகள் உள்ளாள்.
சம்பவத்தன்று பவித்ரா மற்ற குழந்தைகளுடன் தெருவில் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி (54) என்ற வியாபாரி அங்கு வந்துள்ளார்.
தன்னிடம் இருந்த சாக்லேட் மற்றும் இனிப்பை பவித்ராவுக்குக் கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
மேலும் குழந்தையை அங்கிருந்து தூக்கிச் செல்லவும் முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த மஞ்சுளா, இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து குழந்தையை குப்புசாமியிடமிருந்து பறித்துள்ளார். மேலும்,அவருடன் சண்டை பிடித்துள்ளார்.
பிறகு தனது கணவரைத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறினார். விரைந்து வந்த பூங்காவனம் குப்புசாமியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது கோபத்தில் அங்கிருந்த இரும்புக் குழாயை எடுத்து தலை மற்றும் முகத்தில் தாக்கினார். இதில் குப்புசாமி படுகாயமடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் வந்தவாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து பூங்காவனத்தை போலீஸார் கைது செய்தனர்.