கருணாநிதி-பாதுகாப்பு வேன் கவிழ்ந்து 2 போலீசார் காயம்
பெங்களூர்: பெங்களூரில் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்புக்குச் சென்ற கர்நாடக போலீஸ் வேன் கவிழ்ந்து இரு போலீசார் காயமடைந்தனர்.
முதல்வர் கருணாநிதி நேற்று பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். சென்னைக்கு புறப்படுவதற்காக தனது மகள் செல்வி வீட்டிலிருந்து காலையில் கிளம்பினார் கருணாநிதி. அவரது காருக்குப் பின்னார் பாதுகாப்புக்கு கர்நாடக போலீசாரின் வாகனங்கள் உடன் சென்றன.
காலை 10.20 மணியளவில் யஷ்வந்தபூர் பாலத்தின் அருகே பாதுகாப்புக்கு வந்த வேன் கவிழ்ந்து. இதில் வேனில் இருந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் சென்னே கெளடா, கான்ஸ்டபிள் பத்ரிநாத் ஆகியோர் காயமடைந்தனர்.
இருவரும் லேசான காயங்களுடன் எம்.எஸ். ராமய்யா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தால் கருணாநிதியின் பயணம் பாதிக்கப்படவில்லை. அவரும் நேற்று பிற்பகல் சென்னை வந்து சேர்ந்தார்.
கருணாநிதி பயணத்தில் 2வது விபத்து...
கடந்த 24ம் தேதி முதல்வர் கருணாநிதி பெங்களூர் வந்தார். மகள் செல்வி வீட்டுக்கு அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஹெப்பால் பாலப் பகுதியில் அவரது வாகன வரிசையில் வந்த ஒரு வாகனம் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக பாதுகாப்புப் படையினர் தீயை அணைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.