காவல் நிலையத்தில் எல்லா புகார்கள் மீதும் இனி எப்ஐஆர் கட்டாயம்!
டெல்லி: ருச்சிகா விவகாரத்தின் எதிரொலியாக, இனி காவல் நிலையத்தில் அளிக்கப்படும் எல்லா புகார்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்த வேண்டியதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
காவல் நிலையங்களில் அளிக்கப்படும் சில புகார்கள் மீது போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்வது இல்லை என்று தொடர்ந்து புகார்கள் இருந்துவருகின்றன.
டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா விவகாரத்தில், போலீசார் சம்பவம் நடந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், காவல் நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்து புகார்கள் மீதும் கட்டாயமாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, அடுத்த வாரம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய உத்தரவின் படி, பொய்யான புகாராக இருந்தாலும் கூட, போலீசார் அதன் மீது முதலில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும். பொய்யான புகார் என்று தெரிய வந்தால், அந்த வழக்கை பின்னர் ரத்து செய்யவேண்டும்.
புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கான காரணங்களையும், செய்யாவிடுவதற்கான காரணங்களையும் காவல் நிலைய அதிகாரி விளக்குவது கட்டாயம் ஆக்கப்படுகிறது.
மேலும், புகாரின்பேரில், ஒருவரை கைது செய்ததற்கும், கைது செய்யாமல் இருப்பதற்கும் கூட போலீஸ் நிலைய அதிகாரி கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.
இதுதொடர்பாக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறது.