2030ல் இந்தியர்கள் நிலவில் நடப்பார்கள்-கலாம்
திருச்சி இயேசு சபை கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாடு மற்றும் நிகழ்ச்சிகளில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியையொட்டி கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றது. அதில் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அப்துல்கலாம் பதில் அளித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலாம் பேசுகையில், 'ஆசிரியர்கள், அறம்சார்ந்த கல்வியையும், வாழ்க்கை முறைகளையும் மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.
நம்நாடு, 2020ல் நிச்சயம் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இருக்கும். அதற்கு, நம் கல்வித்தரம் உயர்த்தப்பட வேண்டும். அறிவியலும், ஆன்மிகமும் இணைந்த கல்வியை மாணவர்கள் பெறவேண்டும்.
நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் மரம் நடவேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால், 100 கோடி மரங்கள் நம்மால் நடமுடியும்.
'10 லட்சம் மக்கள், 10 லட்சம் மரம்' என்ற இயக்கத்தை, முனைப்புடன் அனைவரும் செயல்படுத்த முன்வரவேண்டும்' என்றார்.
மாணவர்கள் பல்வேறு கேள்விகளுக்கு கலாம் பதில் அளிக்கையில், 'நாட்டில் வறுமை உள்ளிட்ட பிரச்னைகளை ஒழிக்க கல்வியே சிறந்த மருந்து. 'புரா' திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களை முன்னேற்ற வசதி படைத்தவர்கள் முன்வர வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு உயர்கல்வி முக்கியம். உயர்கல்வி அளிக்க, நம்நாட்டில் நூற்றுக்கணக்கான பல்கலை தேவைப்படுகிறது.
தனிமனித ஒழுக்கம் என்பது சமுதாய சூழலுக்கு முக்கிய தேவை. வரும் 2030ல் இந்தியர்கள் நிலவில் நடப்பார்கள்' என்றார்.