5ல் 2 பேர் இருக்கோம்.. மீட்டிங்க போடுங்க பாஸ்! எடப்பாடி பதவி பறிக்கப்படுகிறது? அதிமுகவில் ட்விஸ்ட்
சென்னை: கடந்த வாரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சியின் உத்தரவை மீறி எஸ்பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள், அவரை அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்குவதற்கான அடுத்தகட்ட வியூகத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
கட்சியின் உட்கட்சி விதிகளின்படி, பொதுக்குழுவைக் கூட்டி எடப்பாடி பழனிசாமியை பதவியிறக்கம் செய்வதற்கான வேலைகளில் முன்னாள் அமைச்சர் எஸ்பி. வேலுமணி, சி.வி. சண்முகம், டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் மூத்த தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

5-ல் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு: சி. விஜயபாஸ்கர் அதிரடி அறிவிப்பு
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அதிமுகவின் அடிப்படை சட்டவிதிகளின்படி பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான போதிய உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "அதிமுகவின் அடிப்படை விதிகளின்படி, மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு (1/5) உறுப்பினர்கள் எழுதிக் கேட்டுக் கொண்டால், கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது கட்டாயமாகும். ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஒருதலைப்பட்சமான போக்கிற்கு எதிராகவும், கட்சியைப் பலப்படுத்த பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் ஐந்தில் இரண்டு பங்கு (2/5) பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்," என்று அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுக்குழு உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும், அவற்றை விரைவில் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகச் சமர்ப்பித்து, உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட வலியுறுத்தப் போவதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ்-ஐ நீக்க என்ன வியூகம்?
வேலுமணி, சி.வி. சண்முகம், மற்றும் விஜயபாஸ்கர் அடங்கிய அதிருப்தி குழுவினர், இபிஎஸ்-க்கு எதிராகப் பின்வரும் முக்கியக் காரணங்களை முன்வைத்து பொதுக்குழுவை நோக்கி நகர்கின்றனர்:
கட்சியின் தோல்விகளும், சொந்த முடிவுகளும்: கடந்த சில தேர்தல்களாக அதிமுக தொடர் சரிவைச் சந்தித்து வருவதற்கும், மூத்த தலைவர்களை ஆலோசிக்காமல் இபிஎஸ் தன்னிச்சையாக முடிவெடுப்பதுமே காரணம் என ரெபல் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
அதிமுகவை மீட்டெடுத்தல்: சசிகலா, டிடிவி தினகரன் போன்ற பழைய முகங்களை மீண்டும் கட்சியில் இணைத்து, ஒருங்கிணைந்த அதிமுகவாகச் செயல்பட்டால் மட்டுமே கட்சியைப் பாதுகாக்க முடியும் என்பது இவர்களின் வாதம்.
பதவி நீக்கத் திட்டம்: இந்தச் சிறப்பு பொதுக்குழுவின் மூலம், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவது அல்லது அவரது அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் புதிய தீர்மானங்களைக் கொண்டு வருவதுதான் இவர்களின் பிரதான நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
கொதிப்பில் எடப்பாடி முகாம்
அரசியல் சாசனத்தின்படி தங்களைக் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம் இல்லை என்று சி.வி. சண்முகம் ஏற்கனவே போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், விஜயபாஸ்கரின் இந்த அறிக்கை இபிஎஸ் தரப்புக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தலைமை நிலையப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலோர் இன்னும் தன் பக்கமே இருப்பதாக நம்பும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, இந்த விவகாரத்தைச் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. கட்சி உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளித்துள்ள நிலையில், தற்போது பொதுக்குழு உறுப்பினர்களைத் தக்கவைக்கும் முயற்சியிலும் இபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார்.
அதிமுகவின் வரலாற்றில் பொதுக்குழுக்கள் எப்போதுமே திருப்புமுனையாக அமைந்திருக்கின்றன. ஓபிஎஸ்-இபிஎஸ் மோதலுக்குப் பிறகு, தற்போது இபிஎஸ்-க்கு எதிராக வேலுமணி, சண்முகம், விஜயபாஸ்கர் கூட்டணி அமைத்திருப்பது, அதிமுகவின் ஒற்றைத் தலைமைப் பதவிக்கு மீண்டும் ஒரு மாபெரும் சவாலை உருவாக்கியுள்ளது. பொதுக்குழு கூட்டப்படுமா அல்லது இந்த விவகாரம் மீண்டும் நீதிமன்றப் படிகளை மிதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications