கராச்சி: மனித குண்டு தாக்குதல்-40 பேர் பலி
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மத ஊர்வலத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 40யைத் தொட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது உள்ளே புகுந்த தற்கொலைப் படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான்.
இதில் சம்பவ இடத்திலேயே 20க்கும் மேற்பட்டோர் உடல சிதறி இறந்தனர். ஏராளமானோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தனர்.
இன்று காலை நிலவரப்படி, தற்கொலைப் படை தாக்குதலில் மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். 65 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் சாகேர் அஹமது தெரிவித்தார்.
ஆனால் மருத்துவர்கள் தரும் தகவலின் படி 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை 40ஐ தாண்டும் என்றும் உள்ளூர் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் பலியானாவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாகாண அரசு இன்றைய தினம் விடுமுறை அறிவித்துள்ளது. அல்-கொய்தா மற்றும் சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, தாக்குதலால் ஆத்திரமடைந்த ஷியா பிரிவினர் கராச்சியில் போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவற்றை அடித்து நொறுக்கி கலவரத்தில் ஈடுபட்டனர். மார்க்கெட் பகுதியில் சில இடங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன.