அமைச்சர் மீது செக்ஸ் புகார்-நர்சுக்கு பாதுகாப்பு
ஹொன்னாளி தொகுதி பாஜக எம்எல்ஏவான ரேணுகாச்சார்யா முதலில் ரெட்டி சகோதரர்களுடன் இணைந்து முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.
பின்னர் தனியே ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டு அமைச்சர் பதவி கோரி எதியூரப்பாவுக்கு தலைவலி தந்தார். இதையடுத்து அவருக்கு கடந்த வாரம் அமைச்சர் பதவி தந்தார் எதியூரப்பா.
ஆனால், இந்த ரேணுகாச்சார்யா ஒரு குஜால் பேர்வழி ஆவார். திருமணமான இவர் ஜெயலட்சுமி என்ற நர்சுடன் நெருங்கிப் பழகிவிட்டு அவரை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு உள்ளது.
இருவரும் நெருக்கமாக இருந்த படங்களும் வெளியாயின.
தன்னை ஏமாற்றியதால் ரேணுகாச்சார்யா மீது ஜெயலட்சுமி புகார் கூற, அவருக்கு மிரட்டல் விடுத்தார் ரேணுகாச்சார்யா. மேலும் தன்னை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினார் ஜெயலட்சுமி.
இந்நிலையில் ரேணுகாச்சார்யா அமைச்சராகிவிட்டதால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஜெயலட்சுமி கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து ஜெயலட்சுமியின் மல்லேஸ்வரம் பகுதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது வீட்டைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய 3 போலீஸார் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் ஜெயலட்சுமி கூறுகையில்,
ரேணுகாச்சாரியா என்னை இப்போது சமாதானப்படுத்த முயல்கிறார். முதலில் மிரட்டிப் பார்த்தார். இப்போது ஒரு ஆளை விட்டு சமரசம் பேச முயல்கிறார். ஆனால், என்னை ஏமாற்றிய ரேணுகாச்சாரியாவின் அரசியல் வாழ்க்கையை முடிக்காமல் விட மாட்டேன். என்னிடம் பணத்தையும் வாங்கி மோசடி செய்த நபர் தான் இந்த ரேணுகாச்சாரியா.
என்னை சந்திக்கவும் அவர் முயல்கிறார். என்னைப் பார்க்க வந்தால் அவருக்கு செருப்பு மாலை நிச்சயம். ரேணுகாச்சாரியாவை பதவி நீக்க வேண்டும் என்று கோரி ஆளுநரை சந்திக்கவுள்ளேன். பெண்கள் அமைப்புகளை திரட்டி அவருக்கு எதிராக போராடுவேன் என்றார்.













Click it and Unblock the Notifications