கர்நாடகம்-தமிழ்வழி மாணவர்கள் 95%தோல்வி
பெங்களூர்: பெங்களூரில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 95 சதவீதம் பேர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.
பெங்களூர் மற்றும் கோலார் தங்கவயல் ஆகிய இடங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் தமிழ் வழி வகுப்பு தனியாக உள்ளது.
இவற்றில் தர்மபுரி, சேலம், வேலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இக்கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் கடந்த 17ம் தேதி வெளியானது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தமிழ் வழியில் படித்த மாணவ, மாணவிகளில் 95 சதவீதம் பேர் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
பெங்களூரில் உள்ள ஒவ்வொரு கல்லூரியிலும் ஓரிரு மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலாமாண்டு தேர்வில் 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் ஆண்டில் தோல்வி அடைந்துள்ளனர்.
'கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டால், சரியான பதில் கிடைக்கவில்லை. அரசு தேர்வு கட்டுப்பாட்டாளர் பிரதீமாவிடம் கேட்டோம். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க சொல்கிறார்கள்.
கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் தமிழில் எழுதியவர்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக 3 ஆயிரம் பேர் பெயிலாக்கப்பட்டதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது' என மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் இதுபற்றி மாணவர்கள் புகார் கூறியுள்ளனர். தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் இதுகுறித்த புகார் மனுவை கொடுத்துள்ளதாக மாணவர்கள் கூறினர்.