மருத்துவமனை 'பில்' கட்ட முடியாததால் உயிரிழந்த குழந்தை
சென்னை: பணம் செலுத்தாத காரணத்தால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்த குழந்தையின் தந்தை, தனியார் மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வியாசர்பாடி பள்ளத்தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லோகநாதன் (30). இவரின் மனைவி தனலட்சுமி. குழந்தைகள் தனுஷ் (6), சுபஸ்ரீ (2).
குழந்தை சுபஸ்ரீ தொடர் வாந்தி போன்ற பிரச்னையால் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இரவோடு இரவாக மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையால் சுபஸ்ரீயின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால், சேத்துப்பட்டில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தால் தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறினார்கள். எனவே நள்ளிரவில் குழந்தை சுபஸ்ரீயை சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், குழந்தை சுபஸ்ரீயை மருத்துவமனையில் அனுமதிக்க முதலில் பணம் கட்டுமாறு கூறியுள்ளனர். கூலித் தொழிலாளியான லோகநாதனிடம் அவர்கள் கேட்ட அளவுக்கு பணம் இல்லை.
இதனால், பரிதாபமான நிலையிலும் சுபஸ்ரீயை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்ட நிர்வாகத்தினர், பணம் செலுத்திய பின்னரே சிகிச்சையை மேற்கொள்ள முடியும் கூறியுள்ளனர்.
இலவசமாக சிகிச்சை பெற வேண்டுமானால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், சுபஸ்ரீயோ மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். இதனால் மனமுடைந்த லோகநாதன், எங்கு செல்வது என புரியாமல் அருகில் இருந்த மற்றொரு தனியார் மருத்துவமனையில் குழந்தையை காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளார்.
அங்கு சுபஸ்ரீயை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டதும் லோகநாதனும் அவரது மனைவியும் கதறி துடித்தனர்.
கடனுக்காகவாவது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருந்தால் குழந்தையை காபாற்றியிருக்கலாம் எனக் கூறி ஆத்தரமடைந்த லோகநாதன் இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.
'எனது 2 வயது குழந்தை சுபஸ்ரீ சாவுக்கு தனியார் ஆஸ்பத்திரிதான் காரணம். குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.