ஜெ. வீடு: மதுரை-ஈரோடு அதிமுகவினர் முற்றுகை

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் செல்லூர் ராஜூ. இவருக்கும் கட்சி பிரமுகர்கள் சிலருக்கும் இடையே கட்சி தேர்தல் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது.
இந் நிலையில் மதுரை அதிமுகவினர் ஏராளமானோர் இன்று சென்னை வந்தனர். அவர்கள் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டின் முன் குவிந்து செல்லூர் ராஜூக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதையடுத்து மதுரை வட்டச் செயலாளர்கள் முத்து, முத்துசாமி, ராமன் ஆகியோர் மட்டும் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஜெயலலிதாவின் உதவியாளரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அதில், மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ கட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார். பணம் வாங்கிக் கொண்டு கட்சிப் பதவி தருகிறார். எனவே ராஜூவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
ஈரோடு அதிமுகவினரும் முற்றுகை..
இதுபோல் ஈரோடு நகர அதிமுக செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட செந்தில் என்பவர் தலைமையில் 50 பெண்கள் உள்பட 150 பேர் போயஸ் கார்டன் வந்து ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட்டனர்.
அப்போது ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், நகரச் செயலாளர் 'மார்க்கெட்' ராஜா ஆகியோரை நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இருவரும் கட்சி விரோதமாக செயல்படுவதாகவும், பணம் வாங்கிக்கொண்டு கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு எல்லாம் பதவிகள் கொடுப்பதாகவும், உண்மை தொண்டர்களை புறக்கணிப்பதாகவும் கோஷமிட்டனர்.
இதையடுத்து அவர்களில் சிலர் மட்டும் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் அழைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்தும் புகார் மனு பெறப்பட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியும் தரப்பட்டது.
இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
சமீபத்தில் கரூர், நாமக்கல் மாவட்ட அதிமுகவினரும் இதே போல மாவட்ட நிர்வாகிகள் மீது புகார் கூறி ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் இப்போது மதுரை, ஈரோடு மாவட்டத்தினர் போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முற்றுகை காரணமாக போயஸ்கார்டன் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்து எந்த மாவட்டமோ?!.
தூத்துக்குடி அதிமுக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி:
இந் நிலையில் தூத்துக்குடியில் வட்டச் செயலாளர் பதவி கேட்டு அதிமுக பிரமுகர் தீக்குளிக்க முயற்சித்தார்.
தூத்துக்குடியில் அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்தது. 7வது வட்டச் செயலாளர் பதவிக்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதனின் ஆதரவாளர் சந்தனப்பட்டு என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே அதிமுக கவுன்சிலராகவும் உள்ளார்.
இந்நிலையில் நகரச்செயலாளர் பெரியசாமியின் ஆதரவாளர் ஏசாத்துரை தனக்கு அந்தப் பதவியை வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications