பனி: டெல்லியில் விமான-ரயில் போக்குவரத்து தொடர்ந்து பாதிப்பு
டெல்லி: கடும் பனி மூட்டம் காரணமாக தலைநகர் டெல்லியில் விமானங்கள் கிளம்புவதும் தரையிறங்குவதும் தாமதமாகின்றன.
பொதுவாக 300 மீட்டர் தூரம் இருக்கும்போதே தரை தெளிவாகத் தெரிய வேண்டும். ஆனால் இன்று புதன்கிழமை காலை 100 மீட்டர் அருகாமையில் கூட தரை தெளிவாகத் தெரியாததால், விமானத்தைத் தரையிறக்க பெரும் சிரமப்பட்டனர் விமானிகள்.
சென்னை, ஸ்ரீநகர் செல்லவிருந்த நான்கு விமானங்கள், அமிர்தசரஸ் மற்றும் பாட்னா கிளம்பவிருந்த விமானங்கள், மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகவே இவை கிளம்பின.
விமானங்கள் மட்டுமல்ல, ரயில் போக்குவரத்தும் இந்த பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் நிஜாமுத்தீனுக்கு வர வேண்டிய பல ரெயில்கள் சில மணி நேர தாமதமாகவே வந்து சேர்ந்தன. இதனால் அலுவலகம் செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவசிக்குள்ளானார்கள்.
இன்னும் இரு தினங்களுக்கு இதே போன்ற பனி மூட்டம் நிலவும் என டெல்லி வானிலை மையம் அறிவித்துள்ளது.