மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே 3வது மாற்றுப் பாதை
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
தனது பயணத்தின்போது ஊட்டியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நீலகிரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழை, நிலச்சரிவு காரணமாக 45 பேர் இறந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது.
மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு பதிலாக உடனடியாக 50 தற்காலிக வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டன. நிரந்தர வீடுகள் கட்டித்தரவும் முதல்-அமைச்சர் முடிவு எடுத்து உத்தரவு விட்டுள்ளார்.
இதற்காக கலெக்டர் மூலம் ரூ.59 கோடிக்கு முன் மொழிவுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணி குடிசை மாற்று வாரியம் மூலம் விரைவில் தொடங்கப்படும்.
மழையால் வீடு இழந்தவர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் ஆயிரத்து 968 பேருக்கு ரூ.59 கோடியில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட உள்ளது. இதற்கான இடம் இனி மேல் தேர்வு செய்யப்படும்.
மழையால் நெடுஞ்சாலைகளில் 34 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவற்றை போர்க்கால அடிப்படையில் சீர்ப்படுத்த முடிவு எடுக்கப்பட்டு உடனடியாக 22 இடங்களில் முழுமையாக சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டன. மீதம் உள்ள பணிகள் சில நாட்களில் முடிக்கப்பட்டு முழுமைபெறும்.
நலத்திட்ட பணிகளை நிறைவேற்றுவதில் எங்கெங்கு பிரச்சினை உள்ளது. எங்கு தாமதம் உள்ளது என்று கேட்டு அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி பணிகளை விரைவுப் படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மசினகுடி வழியாக 3-வது மாற்றுப்பாதை அமைக்கும் திட்டம் ஆய்வில் இருக்கிறது. மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டு உள்ளது.
திரியூர்-தெங்கு மராடா வழியாக சத்தியமங்கலத்துக்கு 3-வது மாற்றுப்பாதை அமைக்கும் பகுதியில் புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. யானை வழித்தடமும் உள்ளது. இதனால் அங்கு சாலை அமைக்க இயலாது என சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை கருத்து தெரிவித்து உள்ளது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது என்றார் ஸ்டாலின்.