யானைத் தந்தம் கடத்திய 8 பேர் கும்பல் கைது
தர்மபுரி: தர்மபுரியில் யானைத் தந்தம் கடத்திய எட்டு பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
தர்மபுரி சோகத்தூர் கூட்டு ரோடு அருகே இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக நான்கு பைக்கில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்தது. அவர்களை போலீசார் மடக்கி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் பைக்கில் இரு யானை தத்தங்களை நான்கு துண்டாக வெட்டி பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது.
மொத்தம் நான்கரை கிலோ எடை கொண்ட யானை தந்தம் மற்றும் பைக்கை போலீஸார் பறிமுதல் செய்தனர். யானை தந்தம் கடத்தி வந்த சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த நல்லதம்பி (55), சுதாகர் (27), ராஜ்குட்டி, குமார், கிருஷ்ணகிரியை சேர்ந்த மாதேஷ், பென்னாகரத்தை சேர்ந்த சக்திவேல், வீரமணி, ராஜ் ஆகிய எட்டு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைதான எட்டு பேரையும் போலீஸார் தர்மபுரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.