குடு்ம்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிய 'கிராம பெரிசுகள்'
ராமநாதபுரம்: அரசு வழங்கிய இலவச நிலத்தை பறித்துக்கொண்டு, ஐந்து குடும்பங்களையும் கிராமத்தை விட்டு ஒதுக்கிவைத்த கொடுமை ராமநாதபுரம் அருகே அறங்கேறியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மகிண்டி குடியிருப்பை சேர்ந்தவர்கள் பானுமதி(26), மலர்விழி(25), குருவம்மாள்(35), இந்திரா(45), பொன்னந்தியான்(52).
இவர்களுக்கு இலவச நில திட்டத்தின் கீழ், 2008ம் ஆண்டு அரசு சார்பில் இலவச பட்டா வழங்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிராமத்தின் எதிர்கால தேவைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, இலவசமாக வழங்க கூடாது என அதிகாரிகளிடம் முறையிட்டு, இலவச பட்டா வழங்கியதற்கு ரத்து உத்தரவும் பெற்றனர்.
இதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட ஐந்து பேரும், மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அந்த ஐந்து குடும்பத்தையும் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
மேலும், இவர்களுடன் யாரும் பேசக்கூடாது, கடைகளில் பொருட்கள் வழங்க கூடாது, உறவு முறை வைத்து கொள்ள கூடாது என தீர்மானம் நிறைவேற்றினர்.
மேலும், இவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கப்பட்ட இடத்தையும் பறித்து, விலைக்கு விற்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், பள்ளிக்கு கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
உடனே ஊரைவிட்டு காலி செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த கொடுமை அதிகரிக்கவே, இவர்கள் உயிருக்கு பயந்து, அருகில் உள்ள காட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.