மதுரை மாநகராட்சியில் மெகா ஊழல்-கூண்டோடு வெளிநடப்பு
மதுரை: மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஊழலுக்கு மேயர் தேன்மொழி பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக, மதிமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் கோ.தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்றக் குழுத் தலைவர் கணேசன் பேசுகையில்,
'மதுரை மாநகராட்சியில் ஊழல் மலிந்து போயுள்ளது. ராஜாஜி பூங்காவில் டிக்கெட் கொடுக்காமல் பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சுற்றுச்சாலை ஊழலிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாநகராட்சியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் முறைகேடு நடந்து 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாநகராட்சியில் உள்ள எக்கோ பார்க்கில் குறைந்த அளவு வசூல் செய்யப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் எக்கோ பார்க்கிற்குள் இருந்து கொண்டு ஊழியர்களை மிரட்டி வருகின்னறர்.
வெள்ளைக்கல்லில் குப்பைக் கொட்டும் இடத்தில் தொடர்ந்து ஊழல் நடக்கிறது. இப்படி மதுரை மாநகராட்சியில் மலிந்து போய் உள்ள ஊழலுக்கு மேயர் தான் பொறுப்பேற்க வேண்டும். இதை வலியுறுத்தி நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்' என்றார்.
இதே கருத்தை வலியுறுத்தி அதிமுக, மதிமுக, தேமுதிக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.