அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஊழியர்களுக்கு 30 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என்றும், 'ஏ' மற்றும் 'பி' பிரிவு அலுவலர்களுக்கு சிறப்பு போனஸாக ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
2008-2009ம் ஆண்டிற்கு 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக சென்ற ஆண்டு இருந்த உச்ச வரம்பான ரூ. 2500யுடன் ரூ. 500 உயர்வு அளித்து ரூ. 3,000 உச்சவரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கிடவும்,
'ஏ' மற்றும் 'பி' தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ரூ. 1,000 சிறப்பு போனஸ் வழங்கிடவும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ. 500 பொங்கல் பரிசு வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த, மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப்பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள்,
குறு அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையில் பணிபுரிந்து வரும் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியம் ரூ. 1000 வழங்கப்படும்.
உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில் நுட்பக்கல்விக் குழு, இந்திய வோளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.
இதனால் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ. 272 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications