கோபன்ஹேகன் மாநாட்டு தீர்மானம் யாரையும் திருப்திப்படுத்தவில்லை - மன்மோகன் சிங்

97வது இந்திய அறிவியல் மாநாடு திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. வரும் வியாழன்கிழமை வரை நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை திறந்து வைத்தார்.
மாநாட்டின் ஐந்து நாள் நிகழ்ச்சிகளில் நாடுமுழுவதிலும் இருந்து அறிவியல் துறையைச் சேர்ந்த சுமார் 7,000 பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். உலகெங்கும் உள்ள அறிவியல் அறிஞர்கள் 300 பேர் இதில் உரையாற்றுகின்றனர்.
கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் சார்பில் ஐஎஸ்ஆர்ஓ மற்றும் கேரள பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இம்மாநாட்டில், 21ம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி விவாதிப்பதே நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், அறிவியல் துறையில் அரசியல் மற்றும் அதிகாரவர்க்கத்தின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும்.
இதுபோன்ற ஆரோக்கியமான சூழல் அமைந்தால் தான், நாட்டின் அறிவியல் துறையை செழிப்பாக்க வெளிநாட்டில் உள்ள அறிவியல் நிபுணர்கள் இந்தியாவுக்கு ஆர்வமுடன் வந்து ஆய்வுகளில் ஈடுபடுவார்கள்.
அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு நிதி ஆதாரம் மட்டுமே தேவையானது அல்ல, பல்கலைக் கழக நிர்வாகங்கள் மற்றும் பேராசிரியர்களின் மனோநிலையும் மாற வேண்டும்.
நம் நாட்டில் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்களின் புதுமையான ஆற்றல்மிகுந்த திறன்களை நாம் வெளிக்கொண்டு வர வேண்டுமெனில் நம்முடைய அறிவியல் துறையை முடக்கி வைத்திருக்கும் அதிகார வர்க்கம் மற்றும் ஒருசார்பு நடவடிக்கைகள் என்னும் கைவிலங்குகளை உடைக்க அரசாங்கத்துடன் அறிவியலாளர்களும் இணைந்து போராட வேண்டும்.
இதன்மூலம் வறண்டுபோன விஞ்ஞானத்தை எதிர்காலத்தில் வளமானதாக்க முடியும். 2010-2020ஐ புதுமைகளுக்கான காலகட்டமாக அரசு அறிவித்துள்ளது. பழைய தொழில்நுட்பங்களையே வைத்துக்கொண்டு நாம் நீண்டநாட்களுக்கு காலத்தை ஓட்ட முடியாது.
இந்த விஷயத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் கருத்துடன் நான் உடன்படுகிறேன்.
ஒவ்வொரு துறையிலும் புதுமை தேவைப்படுகிறது. அந்த தேவையை குறித்த காலத்துக்குள் குறைவின்றி நிறைவு செய்தால் தான் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியை நாடு எட்டமுடியும்.
வளர்ந்த நாடுகளில் உள்ள விஷயங்கள் எப்போதும், எல்லா சூழ்நிலைகளிலும் நமக்கு கைகொடுப்பதில்லை. எனவே நம்முடைய பிரச்னைகளுக்கு நாமே தீர்வுகளை வடிவமைத்துக் கொள்ளவேண்டும்.
தேசிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் வரும் மார்ச் மாதம் முதல் செயல்படத் துவங்கும். ஆய்வு திட்டங்களுக்கு பொருளாதார மற்றும் இன்னபிற ஆதரவுகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த வாரியம், முக்கிய விஞ்ஞானிகளை கொண்டு சுதந்திர அமைப்பாக இயங்கும்.
மேலும், விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறையில் பெண்களை அதிகளவில் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கோபன்ஹேகன் புவிவெப்ப தடுப்பு மாநாடு திருப்திகரமாக அமையவில்லை. அதன் தீர்மானம் யாருக்கும் திருப்தி தரவில்லை. அனைவருக்கும் அது ஏமாற்றமாகியுள்ளது. சில முன்னேற்றங்களே அதனால் ஏற்பட்டன என்றார் சிங்.












Click it and Unblock the Notifications