உயிரிழந்தது அரசு கேபிள் டிவி-ரூ.50 கோடி வீண்

சன் டிவி குழுமத்துக்கும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து சுமங்கலி கேபிள் விஷனுக்கு (எஸ்.சி.வி) போட்டியாக மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரி ராயல் கேபிள் விஷன் என்ற நிறுவனத்தை போட்டியாக தொடங்கினார்.
தென் மாவட்டங்களில் எஸ்.சி.வி வசம் இருந்து வந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இதில் சேருமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இந் நிலையில் எஸ்.சி.வியை முடக்க தமிழக அரசே கேபிள் டிவி சானல்களை தரும் வகையில், அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனைத் தொடங்கியது. படுவேகமாக இதில் கேபிள் டிவி ஆபரேட்டர்களை இணைக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டன.
ஆனால் மாறன் சகோதரர்கள் குடும்பத்தினருக்கும், முதல்வர் குடும்பத்தினருக்கும் திடீரென சமரசம் ஏற்பட்டு விட்டதால் அரசு கேபிள் டிவி கழகம் முடங்கிப் போய் விட்டது.
பல கோடி பணத்தை செலவழித்து வாங்கப்பட்ட அதி நவீன சாதனங்கள் உள்ளிட்டவை தூசி படிந்து போய்க் கொண்டிருக்கின்றன. இந்த கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்காக இதுவரை அரசு ரூ. 50 கோடியை செலவிட்டுள்ளதாம். அத்தனையும் வீண் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் புலம்புகின்றனர்.
அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனின் ஆலோசனைக் குழு இதுவரை ஒரே ஒரு முறைதான் கூடியுள்ளதாம். தற்போது இந்த கழகம் கிட்டத்தட்ட கோமா நிலைக்குப் போய் விட்டது
அரசு கேபிள் டிவி கழகத்தை தமிழகம் முழுவதும் வியாபித்து பரப்பும் வகையில்தான் அரசு திட்டமிட்டது. இதற்காக தஞ்சாவூர், கோவை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் அதி நவீன சாதனங்களுடன் கூடிய மையங்கள் அமைக்கப்பட்டன.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் கவர் செய்யும் வகையில் நவீன ஆப்டிகல் பைபர் கேபிள்களும் கூட பதிக்கப்பட்டன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள செட் டாப் பாக்ஸ்களை வாங்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
மேலும், 75 சேனல்களுக்கு 100 ரூபாய் (இதில் 22 கட்டண சானல்களும் அடக்கம்) என்று அரசு நிர்ணயித்த கட்டணம், ஆபரேட்டர்களையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. ஆனால் எல்லாம் இப்போது புஸ்வாணமாகிப் போய் விட்டது.
இதுகுறித்து கோவையைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டரும், அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க நிர்வாகியுமான யுவராஜ் கூறுகையில், அரசு விதித்த கட்டுப்பாடுகள் விதிமுறைகளை நாங்கள் ஆட்சேபிக்கவே இல்லை. மேலும், அது எங்களுக்கு உடன்பானதாகவும் இருந்தது. எங்களது தொழிலுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் வகையிலும், சிறந்த முறையில் அதை செய்யும் வகையிலும் இருந்தது.
முதலில் சன் குழுமம் தனது முக்கிய சானல்களை அரசு கேபிள் டிவிக்குத் தர மறுத்ததால்தான் பிரச்சனை உருவானது. இருப்பினும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதுவும் கூட ஒரு வகையில் சரி செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது அரசு கேபிள் டிவி கழகம் முடங்கிப் போயிருப்பது பெரும் வருத்தத்தைத் தருகிறது என்றார்.
எஸ்.சி.வி., ஆர்.சி.வி இடையிலான சண்டை முற்றிய நிலையில், அரசு கேபிள் டிவி கழகம் காலெடுத்து வைத்த நிலையில் எஸ்.சி.வியைப் போலவே இன்னொரு முக்கிய எம்.எஸ்.ஓவான ஹாத்வே தனது சேவையை நிறுத்திக் கொண்டது. பின்னர் மீண்டும் அது திரும்பி வந்தது. ஆனாலும் நிலைமை இன்னும் மோசமாக இருந்தாதல் தற்போது அது மீண்டும் திரும்பிப் போய் விட்டது.












Click it and Unblock the Notifications