பென்னாகரம்: மனசாட்சிப்படி வாக்களியுங்கள்-ராமதாஸ்
பென்னாகரம்: பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்கள் பணத்துக்காக வாக்களிக்காமல் மனசாட்சியுடன் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பெண்ணாகரம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பாமக அக் கட்சியின் சார்பில் ஜி.கே.எம்.தமிழ்குமரனை களமிறக்கியுள்ளது.
இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பென்னாகரம் தொகுதியில் முழுவதும் தீவிர பிரச்சாரத்தி்ல இறங்கியுள்ளார் ராமதாஸ்.
பென்னாகரத்தைச் சுற்றியுள்ள பாப்பாரப்பட்டி, பெரியூர், திருமல்வாடி, பனைகுளம், தொட்டலாம்பட்டி, வேலம்பட்டி, தட்டாரம்பட்டி உள்ளிட்ட 31 கிராமங்களில் கடந்த இரு நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராமதாஸ் பேசுகையில்,
பென்னாகரம் எனக்கு மிக பிடித்தமான தொகுதி. கடந்த 1996ம் ஆண்டு இந்த தொகுதியில் பாமக தனித்து போட்டியிட்டு முதல் வெற்றி பெற்றது. பாமகவுக்கு அரசியல் அங்கீகாரம் வாங்கித் தந்த பென்னாகரம் தொகுதியை நாங்கள் மறக்க மாட்டோம்.
10 ஆண்டு காலம் இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜி.கே.மணி இந்தப் பகுதியில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் யாரிடமாவது ஒரு ரூபாய் லஞ்சம் கேட்டிருப்பாரா?. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக என்ன நடந்தது என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததும் பாமக ஒழிந்து விட்டது என்று கூறினார்கள். பாமகவை யாராலும் ஒழிக்க முடியாது. உழைக்கும் மக்கள், பாட்டாளி மக்களை யாராலும் அசைக்க முடியுமா?.
கடந்த தேர்தலில் ஒரு தொகுதிக்கு ரூ. 100 கோடி செலவு செய்து பாமகவை திட்டமிட்டே தோற்கடித்தனர். இந்த தேர்தலிலும் பணம் கொடுக்க வருவார்கள். வேண்டாம் என்று கூற வேண்டாம், பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள். பணநாயகத்துக்கு அடிமையாகி விடாமல் மன சாட்சியுடன் வாக்களியுங்கள்.
நீங்கள் அளிக்கும் ஓட்டு எனது கரத்தை வலுப்படுத்தும். எனது கரத்தை வலுப்படுத்தினால் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வேன் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications