பெரும் ஏமாற்றம்-வைகோ; அரசியல் நோக்கம்-ராமதாஸ்
சென்னை: ஆளுநர் உரை பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
பருவ மழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆளுநர் உரையில் ஏதும் குறிப்பிடவில்லை. மணல் கொள்ளையைத் தடுக்க எந்தவித உறுதியும், சீரான மின்சாரம் கிடைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியோ தெரிவிக்கவில்லை.
வைரஸ் காய்ச்சலால் தாக்கப்பட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தகுந்த தடுப்பு சிகிச்சை அளிப்பது பற்றியும் ஆளுநர் உரையில் குறிப்பிடவில்லை.
சிக்குன்குனியாவால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தகுந்த மருந்துகள் அரசு மருத்துவமனையில் இல்லை. அது பற்றி கவர்னர் உரையில் எதுவும் இல்லாதது வருந்தத்தக்கது என்று கூறியுள்ளார்.
ஜனநாயகத்தை ஊனப்படுத்தும்-மார்க்சிஸ்ட்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த உரையில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்படவில்லை. மக்களை வாட்டி வதைக்கிற விலைவாசி உயர்வு கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை ஆளுநர் உரை ஒப்புக் கொள்கிறது.
வறட்சி காரணமாக விவசாய உற்பத்தி குறைந்ததே விலை உயர்வுக்குக் காரணம் என பூசி மெழுகப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் அனைத்திலும் ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய மறுப்பது, பதுக்கல்களில் கை வைக்கத் தயங்குவது போன்றவையே விலைவாசி உயர்வுக்கு முழுக் காரணம் என்பதை மாநில அரசு மூடி மறைக்கிறது.
ஆற்றோரக் குடியிருப்புகளில் இருந்து ஏழை மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்று குடியிருப்பு ஏற்பாடுகள் பற்றி அரசு பேசவில்லை.
ஆளுநர் உரை விவாதத்துக்கு மூன்று நாள்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது ஜனநாயகச் செயல்பாட்டை ஊனப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
குறுகிய அரசியல் ஆதாயம்-ராமதாஸ்:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், ஆளுநர் உரை வேலையில்லா திண்டாட்டம், வளர்சிக்கான வழிமுறைகள் போன்றவற்றையெல்லாம் பிரதிபலிக்கவில்லை. மாநிலப் பொருளாதாரம் வளர்ச்சி அடையவும், அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வளர்ச்சியை பெறவும் கவர்னர் உரையில் எத்தகைய தொலைநோக்கு திட்டங்களும் இடம் பெறவில்லை.
அதில் அறிவிக்கப்பட்டிருப்பவையெல்லாம் குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் கொண்டவைகளாக உள்ளன. கச்சத்தீவு, இலங்கை தமிழர் சிக்கல், நதிகள் இணைப்பு, ஆற்றுப் பிரச்சனைகள் ஆகியவற்றில் மாநில அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பது கவர்னர் உரையில் தெளிவாக்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
அதேநேரத்தில், ஆதிதிராவிடர் கடன் ரத்து, மீனவர் கடன் ரத்து, கான்கிரீட் வீடு கட்டித் தருதல் போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்று கூறியுள்ளார்.
இன அறிவிக்க என்ன இருக்கு?-திருமாவளவன்:
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு செயல்படுத்தி வரும் சமூக நலத்திட்டங்களின் சாதனை வரலாற்றில் மேலும் ஒரு மைல்கல்லாக கவர்னர் உரை அமைந்துள்ளது. இனிமேல் அறிவிப்பதற்கு நலத் திட்டங்களே இல்லை என்று கூறியுள்ளார்.
குடை போன்று காக்கும் அரசு-கி.வீரமணி:
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில சுயாட்சி, சேது சமுத்திரத் திட்டம் முதலியவற்றை மத்திய அரசிடம் வலியுறுத்தி குரல் கொடுக்கத் தவறாததோடு, உழவர், உழைப்பாளர் என அனைவருக்கும் பாதுகாப்பு குடை போன்று காக்கும் அரசு இது.
இவ்வரசு வளர்ச்சியை நோக்கிய பயணத்தை என்பது முரசொலித்து சொல்லும் இந்த உரை, வெறும் சொற்கோவைகள் அல்ல. சொன்னதை செய்யும் அரசு தி.மு.க. அரசு என்பதற்கு ஓர் செப்பேடு என கூறியுள்ளார்.
அதே போல தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் ஆகியோர் ஆளுநர் உரை அறிவிப்புகளை வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications