தமிழகத்தில் வெடிகுண்டுக் கலாச்சாரம் - காங். எம்.எல்.ஏ. தாக்கு
சென்னை: பட்டப்பகலில் ஒரு சப் இன்ஸ்பெக்டரை கொலைக் கும்பல் வெடிகுண்டுகளை வீசியும், அரிவாள்களால் வெட்டியும் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வெடிகுண்டுக் கலாச்சாரத்துக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்து ஒடுக்க வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் கூறினார்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு ஞானசேகரன் பேசுகையில்,
நெல்லையில், அமைச்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ் பெக்டரை பட்டப் பகலில் வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன?
வெடிகுண்டு கலாசாரத்தையும், பயங்கரவாதத்தையும் வேரறுக்க, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லஞ்சத்தை ஒழிக்க, அரசுத் துறைகளில் நல்ல அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அரசு விழாக்களில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. ஆனால், சமீப காலமாக தனியார் விழாக்களில் இவர்கள் அதிகமாக கலந்து கொள்கின்றனர். சமூக விரோதிகள் ஊடுருவும், தனியார் நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
சினிமா தொழிலாளர்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கி, அவர்களுக்கு பொற்காலம் தந்தது போல், எங்கள் பொற்காலத்திற்கும் முதல்வர் வழி காட்ட வேண்டும்.
அரசு பஸ் டிரைவர்கள், மொபைல் போன் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உத்தரவிடப்பட்டிருப்பது வரவேற்கதக்கது. அதே நேரத்தில், தனியார் பஸ் டிரைவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரையும், அந்நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது தான், விபத்துகள் குறையும். மீறி மொபைல் போன்களை பயன்படுத்தினால், அவர்களது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வேலூரையும் சேர்க்க வேண்டும். 1,600 கோடி ரூபாயில், இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஐ.டி., பார்க் அமைக்க, சிறுமுகை என்ற இடம் பார்க்கப்பட்டுள்ளது. அங்கு விரைவில் ஐ.டி., பார்க் அமைக்க வேண்டும்.
அதேபோல், கல்வி நிறுவனங்கள், ஆன்மிக தலங்கள் அதிகம் இருப்பதால், விமான நிலையம் அமைக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications