கடன் வழங்க லஞ்சம்- வங்கி மேலாளர் கைது
சென்னை: லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க மானேஜர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ராமாவரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் வயது 63. ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியரான இவர், தனது மகள் திருமண செலவுக்காக கடன் திட்டமிட்டார்.
வடபழனியில் உள்ள தென்சென்னை கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்கத்தில் ரூ.3 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்தார். கடன் ஒப்புதல் தர ரூ.6 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று சங்கத்தின் மானேஜர் ராஜ்குமார் கேட்டுள்ளார்.
முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் தரவேண்டும் எனக்கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த நடராஜன் ரகசியமாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்துவிட்டார்.
மானேஜர் லஞ்சம் வாங்குவதை ஆதாரத்தோடு நிரூபிக்க ரூ.2000 கரன்சி நோட்டுக்களின் மீது நுண்ணிய ரசாயன பவுடரை தடவி, அதை நடராஜனிடம் கொடுத்தனர்.
மானேஜர் ஏற்கனவே கேட்டபடி, லஞ்சப்பணத்தை நடராஜன் நேற்று கொண்டுவந்து கொடுத்தார். அந்த பணத்தை மானேஜர் வாங்கியதும் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து மானேஜரை மடக்க முயன்றனர்.
லஞ்ச பணத்தை கையில் வாங்கிய மானேஜர், போலீசார் பிடிப்பதற்குள் பாத்ரூமுக்குள் தப்பி ஓடினார். பாத்ரூமில் இருந்த தண்ணீருக்குள் லஞ்ச பணத்தை போட்டுவிட்டார். போலீசார் தடவியிருந்த ரசாயன பவுடரை அழிப்பதற்காக மானேஜர் முயற்சித்தார்.
ஆனால் போலீசாரும் பாத்ரூமுக்கு சென்று தண்ணீரில் கிடந்த கரன்சியை உடனடியாக எடுத்தனர். ரசாயன பவுடரும் அழியவில்லை. பின்னர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications