ஆஸி-இந்திய டாக்ஸி டிரைவரை தாக்கியவருக்கு 3 மாதம் சிறை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்லாரட் என்ற இடத்தில் இந்திய டாக்ஸி டிரைவரை, ஆஸ்திரேலிய பயணி கடுமையாக திட்டி தாக்கினார். உடனடியாக கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு அதிரடியாக 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் டாக்ஸி டிரைவர் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட இந்தியரின் பெயர் சதீஷ் தட்டிபமுலா (24). இவரது டாக்சியில் 48 வயதான பால் ஜான் புரோட்ஜன் என்பவர் பயணித்தார்.
குடிபோதையில் இருந்த ஜான், சதீஷை தாறுமாறாகத் திட்டியுள்ளார். உன்னைக் கொன்று விடுவேன் என்று கூறி சரமாரியாக கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார். பின்னர் சதீஷையும், அவரது டாக்சியையும் தாக்கினார்.
இந்த இனவெறித் தாக்குதலில் சதீஷ் லேசான காயமடைந்தார். இதுதொடர்பாக விக்டோரியா போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு ஜானை கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். கோர்ட்டில் அவருக்கு 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜான், பல்லாரட் அருகே உள்ள நேவிகேட்டர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
குருத்வாராவுக்கு தீ:
இந் நிலையில் மெல்போர்ன் நகரில் கட்டப்பட்டு வரும் சீக்கியர் கோவிலான குருத்வாராவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதற்கு சதி வேலையே காரணம் என்று தெரியவந்துள்ளது.
தேசப் பற்று இல்லாத இந்திய அணி-தாக்கரே:
இந் நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தாக்குதல்கள் நிற்காவிட்டால் அந்த நாட்டு கிரிக்கெட் அணியை மகாராஷ்டிர மாநிலத்தில் விளையாட விட மாட்டோம் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே எச்சரித்துள்ளார்.
தனது பத்திரிகையான சாமனாவில் அவர் எழுதியுள்ள கட்டுரையில்,
ஆஸ்திரேலியாவில் நம்முடைய இளைஞர்கள் கத்தியால் குத்தப்படுகிறார்கள், எரிக்கப்படுகிறார்கள், துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள்.
இந்த நிலையிலும் அந்த நாட்டு அணியுடன் விளையாட நம் வீரர்களிடம் எந்த மறுப்பையும் காணோம். இவர்களுக்கு கொஞ்சமாவது தேசப்பற்று இருக்கிறதா?.
முன்பு எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களால் மராட்டியத்தில் விளையாட முடியாமல் செய்தனர். அவர்களால் இன்னமும் மராட்டிய மாநிலத்தில் விளையாட முடியவில்லை. அதே பாணியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் எங்கள் கட்சியினர் நடவடிக்கை எடுப்பார்கள்.
நடிகர் அமிதாப்பச்சன், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் தனக்கு வழங்க முன்வந்த பட்டத்தை ஏற்க மறுத்து உள்ளார். இதன்மூலம் அவர் தனது தேசப்பற்றை வெளிப்படுத்தி உள்ளார்.
அவரைப் போல இந்திய கிரிக்கெட் வீரர்களும் சுயமரியாதையை வெளிப்படுத்தினால், நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் கிரிக்கெட் என்பது இப்போது பணம் சம்பாதிக்கும் விளையாட்டு ஆகி விட்டது. சுய மரியாதை, தேசப்பற்று எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications