இரவில் இரைச்சல் உண்டாக்கினால் சிறை- மத்திய அரசு அதிரடி
டெல்லி: இரவு நேரங்களில் அதிக இரைச்சல் ஏற்படுத்தி மற்றவர்களுக்கு தொந்தரவு தருவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், 'நகரங்களை ஒலி மாசுவில் இருந்து பாதுகாத்து நிம்மதியான இரவு நேரங்களை உறுதி செய்ய சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்.
இதன்படி, குடியிருப்பு பகுதிகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அதிக ஒலி எழுப்பும் ஹாரன், கட்டுமானப் பணிகள், கொண்டாட்டங்கள், பட்டாசு வெடிப்பது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படும்.
பொது இடங்களில், இரவு நேரத்தில் 10 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பக் கூடாது. ஹோட்டல், அரங்கம் போன்றவற்றுக்கு இது பொருந்தும்.
தனியார் இடங்களில் இசைக் கருவிகளின் ஒலி 5 டெசிபலை தாண்டக் கூடாது. அப்பார்ட்மென்ட்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் வைக்கும் டிவி, பாட்டு சத்தம் போன்றவை இந்த கட்டுப்பாடுகளை மீறாமல் இருக்க வேண்டும்.
இவற்றுக்கு மாநில அரசுகள் ஆண்டில் 15 நாட்கள் வேண்டுமானால் 2 மணி நேரம் விதிவிலக்கு அளிக்கலாம்.
தொழிற்சாலை பகுதிகளில் 75 டெசிபல், வர்த்தகப் பகுதிகளில் 65 டெசிபல், குடியிருப்பு பகுதிகளில் 55 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பக் கூடாது.
பள்ளிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகளில் இருந்து 100 மீட்டர் வரை அமைதியிடமாக அறிவிக்கப்படுகிறது. இங்கு ஒலி மாசு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.
இந்த கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை போலீசாரும் கண்காணிக்க வேண்டும். சென்னை, டெல்லி, கோல்கத்தா, மும்பை, பெங்களூர், ஐதராபாத், லக்னோ ஆகிய நகரங்களில் ஒலி மாசுவை கண்காணிக்க தலா 10 நிலையங்கள் அமைக்கப்படும்.
இச்சட்டத்தின் படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதன் தன்மையைப் பொறுத்து அதிகப்பட்சமாக ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் கிடைக்கும்' என்றார்.












Click it and Unblock the Notifications