ஜோதிபாசு மரணம்- கருணாநிதி, ஜெ., வைகோ இரங்கல்
சென்னை: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி..
முதல்வர் கருணாநிதி இதுதொடர்பாக விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், என்னுடைய அருமை நண்பருமான தோழர் ஜோதிபாசு அவர்கள் மறைந்த செய்தியினைக் கேட்டு மிகவும் துயர் அடைந்தேன்.
மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக பல ஆண்டுக் காலம் வீற்றிருந்து- அந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகப் பெரிதும் பாடுபட்டவர் அவர்.
அவருடைய மறைவால் துயருறும் அவருடைய குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமராக்க முயன்றோம்: ஜெ
ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
1999ல் ஜோதிபாசுவை பிரதமராக்க முயற்சி எடுத்தோம். அப்பதவிக்குரிய அனைத்து தகுதிகளும் அவரிடம் இருந்தது. எனினும் அம்முயற்சி வெற்றி பெறவில்லை. அவரது இழப்பு நாட்டுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும். இதன் மூலம் நாடு ஒரு உண்மையான தேசபக்தரை இழந்துள்ளது என்று ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈடுசெய்ய முடியாதது: வைகோ
மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஜோதிபாசுவின் மறைவு பொதுவுடமை இயக்கத்துக்கு மட்டுமல்லாது இந்தியா நாட்டுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து துயரத்தால் வாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், ஜோதிபாசு அவர்களின் குடும்பத்தினருக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மிகப்பெரிய போராளி: தா.பாண்டியன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தோழர் ஜோதிபாசு, இயற்கை எய்திய துக்கச் செய்தியறிந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு, தனது ஆழ்ந்த கவலையையும் மறைந்த தலைவருக்கு வீர வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
தோழர் ஜோதிபாசு, அயல் நாட்டில் மேல்படிப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவப் பருவத்திலேயே, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். 1952 முதல் மேற்கு வங்க சட்டசபைக்குத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், மேற்கு வங்க முதலமைச்சராக தொடர்ச்சியாக கால் நூற்றாண்டுக்கு மேலாகப் பொறுப்பில் இருந்தவர்.
ஒருமுறை அவரை இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பு ஏற்குமாறு தோழமைக் கட்சிகள் முன் மொழிந்தன. வரலாற்றில் ஒரு திருப்பம் ஏற்படுத்தக் கூடிய அந்த வாய்ப்பு நிகழாமல் போனது, நமது நாட்டிற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும்.
கட்சித் தலைவர், மேற்கு வங்க முதல்வர் என்ற வட்டங்களையும் தாண்டி, இந்திய மக்களின் அன்பைப் பெற்ற தேசியத் தலைவராகத் திகழ்ந்தவர். இறுதி வரை லட்சியத்தை நோக்கி நடைபோட்ட மாபெரும் போராளி, அவரது மறைவு, நமது நாட்டிற்கு குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் மாபெரும் இழப்பாகும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள், அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்று கூறியுள்ளார்.
நோய்கள் வென்று விட்டன- ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தன்னலமற்ற சேவையின் மூலம் இந்திய அரசியல்வாதிகளுக்கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய ஜோதிபாசு தமது வாழ்க்கையில் பல போராட்டங்களில் வெற்றி கண்டவர்.
ஆனால், நோய்களை எதிர்க்கும் போராட்டத்தில் நோய்கள் வெற்றி பெற்று அவரின் உயிரைப் பறித்திருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் பாமக சார்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications