விப்ரோ என்ஜீனியர்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை
பெங்களூர்: பெங்களூர் விப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் 2 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டிருப்பது ஐடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் லக்ஷ்மி நாயர் (23). விப்ரோ டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.
ஹரலூர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தனது சகோதரர் அனீஷுடன் தங்கியிருந்தார். அனீஷ் ஹனிவெல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
லக்ஷ்மியின் காதலர் புனேயில் இருக்கிறார். இருவரும் எப்போதும் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக லக்ஷ்மி விரக்தியாகவே காணப்பட்டுள்ளார்.
அனீஷ் கேட்கும் போதெல்லாம் வேறு காரணங்களை சொல்லி மழுப்பிக் கொண்டிருந்தார். இதை அனீஷும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார்.
இந்நிலையில், நேற்று (திங்கள்கிழமை) பகல் 2 மணியளவில் அலுவலகத்தில் இருந்த அனீஷுக்கு லக்ஷ்மியின் காதலர் போன் செய்தார்.
'நீண்ட நேரமாக முயற்சித்தும் லக்ஷ்மி மொபைலை எடுக்கவில்லை. அலுவலகத்திற்கும் லக்ஷ்மி வரவில்லை என சொல்கிறார்கள். என்னவென்று போய் பார்' என அனீஷிடம் கூறியுள்ளார்.
அனீஷ் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, லக்ஷ்மி வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
அதிர்ச்சி அடைந்த அனீஷ் கேரளாவில் உள்ள பெற்றோருக்கும், லக்ஷ்மியின் காதலருக்கும் தகவல் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து லக்ஷ்மியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரில் விப்ரோ நிறுவனத்தில் பணிபுரிந்த மற்றோரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் இன்று தற்கொலை செய்து இறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பெங்களூர் பொன்னப்பன் அக்ரஹாராவில் உள்ள வீட்டில் தற்கொலை செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த வாலிபர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்.
பிரின்ஸ் சிங்ளா (27) என்ற இவரும் திருமணமாகாதவர். வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். லக்ஷ்மி சம்பவத்தைப் போலவே இவரின் முடிவையும் மொபைல் போன் மூலமாகவே தெரிந்துகொள்ள முடிந்தது.
பலமணி நேரமாக மொபைல் போனை பிரின்ஸ் எடுக்காமல் இருந்ததால் இவரின் உறிவினர்கள் நண்பர்களை விசாரித்துள்ளனர்.
இன்று காலை நண்பர்கள் போலீஸ் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் பிரின்ஸ்.
இரண்டு பேரும் இறக்கும் முன் மரணக்குறிப்பு எதுவும் எழுதிவைக்கவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.