உழவர் சந்தை-காப்பீட்டு திட்டம்: கருணாநிதி மகிழ்ச்சி
சென்னை: உழவர் சந்தையும், கலைஞர் காப்பீட்டு திட்டமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக நடந்துவருவதாக முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
2007ம் ஆண்டு டிசம்பரில் உழவர் சந்தைக்கு வந்த விவசாயிகளின் எண்ணிக்கை 1.90 லட்சம் பேர்.
2008ம் ஆண்டு டிசம்பரில் அது 2.09 லட்சமாகவும், கடந்த ஆண்டில் 2.65 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. உழவர் சந்தைக்கு வந்த காய்கறிகளின் வரத்தும், நுகர்வோர் வரவும் அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே அமைக்கப்பட்ட 103 உழவர் சந்தைகளோடு இப்போது நிறுவப்பட்ட 45 சந்தைகளையும் சேர்த்து, மொத்தம் 148 சந்தைகள் உள்ளன.
அதில், 59 உழவர் சந்தைகள் மிகவும் நன்றாகவும், 23 சந்தைகள் நன்றாகவும், 30 சந்தைகள் ஓரளவு நன்றாகவும், 22 உழவர் சந்தைகள் நலிந்த நிலையிலும், 14 சந்தைகள் மிகவும் நலிந்த நிலையிலும் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன.
நலிந்த நிலையிலும், மிக நலிந்த நிலையிலும் இயங்கி வருகின்ற உழவர் சந்தைகளை மேம்படுத்துவதற்கான பணியில் அரசு இயந்திரம் செயல்பட வேண்டும்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்:
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2009ம் ஆண்டு செப்டம்பர் முடிய 4 ஆயிரத்து 430 பேர் பயன் அடைந்துள்ளனர். அக்டோபரில் 5 ஆயிரத்து 377 பேரும், நவம்பரில் 5 ஆயிரத்து 27 பேரும், டிசம்பரில் 10 ஆயிரத்து 994 பேரும் பயன் அடைந்துள்ளனர்.
இதன்படி, ஒரு மாதத்தில் இரண்டு மடங்கு பேர் கூடுதலாக இந்தத் திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளனர். கடந்த 12ம் தேதியுடன் முடிந்த காலத்தில், ஒட்டுமொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 355 பேராகும். அவர்களுக்காக வழங்கப்பட்ட தொகை ரூ.91.35 கோடி.
காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அப்படி அனுப்பப்பட்டவை 77.33 லட்சமாகும்.
அதிலே, வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் 40.42 லட்சமாகும். அதாவது, 52 சதவீத அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விட்டன. எஞ்சிய அடையாள அட்டைகளையும் உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications