'எரிவாயு பஸ்கள்'-கே.என். நேரு கோரிக்கை
சென்னை: எண்ணெய் நிறுவனங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் சென்னையில் அரசு பஸ்களை எரிவாயு மூலம் இயக்க முடியும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஜனவரி 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை எண்ணெய் மற்றும் இயற்கை எரிசக்தி சேமிப்பு இருவார விழா அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த விழாவில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், 'பஸ் டிரைவர்களுக்கு எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக ரூ.150 கோடி அளவில் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் பஸ் டிக்கெட் குறைவாக உள்ளது. கிலோ மீட்டருக்கு 25 பைசா என்றளவில் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மும்பையை போல சென்னையிலும் அரசு பஸ்களை எரிவாயு மூலம் இயக்க வேண்டும். அதற்கு குழாய்கள் மூலம் எரிவாயு இணைப்பை கொண்டு வர எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொதுமேலாளர் பி.ராஜேந்திரன் பேசும்போது, 'பெட்ரோலிய் பொருட்களுக்கான கையிருப்பு குறைவாகவும் தேவை அதிகமாகவும் உள்ளது. இதன் காரணமாக நாட்டின் எரிபொருள் தேவையில் 70 சதவீதம் இறக்குமதி செய்கிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications