தமிழகத்தில் 7 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்
சென்னை: தமிழகத்தில் முதல்கட்டமாக 7.66 லட்சம் குடும்ப அட்டைகள் போலி என கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 1.86 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. அவற்றில் போலிகளை கண்டறிந்து நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல் கட்டமாக, கோவை, திருச்சி, திருப்பூரின் சில பகுதிகள், சென்னையில் அண்ணாநகர் மண்டலம் ஆகிய இடங்களில் போலிகளை கண்டுபிடிக்கும் பணிகள் நடந்தன. இதில் 3 மாவட்டங்களில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டன.
இரண்டாவது கட்டமாக, நாகப்பட்டினம், தூத்துக்குடி, தேனி, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, கடலூர், தருமபுரி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 5.66 லட்சம் அட்டைகளும் நீக்கப்பட்டன.
முதல் இரண்டு கட்டங்களாக நடந்த தணிக்கையில் மொத்தம் 7 லட்சத்து 66 ஆயிரம் குடும்ப அட்டைகள் போலி என அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
இதன்பிறகு திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திண்டுக்கல், ஈரோடு, விருதுநகர், அரியலூர், திருப்பூர், சென்னை மண்டலங்கள் ஆகிய இடங்களிலும் தணிக்கை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் 16.28 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளன. ஜனவரி 31ம் தேதி வரை சம்பந்தப்பட்ட அட்டைதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம்.
அப்படி செய்யாவிட்டால் அவர்கள் குடும்ப அட்டைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எந்தெந்த குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்கிற பட்டியல் அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில் அடுத்த வாரம் ஒட்டப்படும் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications