ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்திய டாக்சி டிரைவர் தாக்கப்பட்டார்

அவரை ஒரு பெண்ணும், ஆணும் சேர்ந்து தாக்கியுள்ளனர். அவர்களின் முகங்கள் வீடியோவில் பதிவாகியுள்ளன. அதை ஆஸ்திரேலிய போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
மெல்போர்ன் நகரின் வடக்குப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இந்திய டாக்சி டிரைவர்கள் மீது நடத்தப்பட்ட ஐந்தாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்கப்பட்ட இந்தியரின் வயது 25. தாக்குதல் குறித்து அவர் போலீஸாரிடம் கூறுகையில், சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. எனது டாக்சியில் பயணித்த ஒரு ஆஸி ஜோடி என்னைத் தாக்கியது. இதில் எனது முகத்தில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக நான் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றேன் என்றார்.
ரிசர்வாயர் என்ற இடத்தில் உள்ள சம்மர்ஹில் ஹோட்டல் முன்பு இந்த இந்தியர் தனது டாக்சியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது ஐந்து பேர் அங்கு வந்து சவாரி போக வேண்டும் என கேட்டுள்ளனர். சாலைப் போக்குவரத்து விதிமுறைப்படி அனைவரையும் ஏற்றிச் செல்ல முடியாது என்றும் 2 பேர் மட்டுமே பயணிக்கலாம் என்றும் இந்தியர் கூறியுள்ளார்.
இதையடுத்து ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மட்டும் ஏறியுள்ளனர்.
டாக்சி கிளம்பிய பின்னர் தங்களுடன் வந்த மற்றவர்களையும் ஏற்ற மறுத்தது குறித்து இந்தியருடன் சண்டை பிடித்துள்ளார் அந்தப் பெண். பிளன்டி சாலையில் கார் போய்க் கொண்டிருந்தபோது டாக்சியில் பயணித்த ஆண், டிரைவரின் முகத்தைக் குத்தியு்ளார். பின்னர் அந்தப் பெண்ணும் சேர்ந்து தாக்கினார். இதையடுத்து காரை நிறுத்தி விட்டு இருவரும் குதித்து ஓடியுள்ளனர்.
பிறகு ஒரு டிராமில் ஏறி இருவரும் தப்பி விட்டனர். அந்த இருவரின் புகைப்படங்களும் கிடைத்துள்ளன. அதை ஆஸ்திரேலிய போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
ஜனவரி 15ம் தேதி ஒரு இந்திய டிரைவர் தாக்கப்பட்டார். அதற்கு அடுத்த 2 இந்திய டாக்சி டிரைவர்கள் தாக்கப்பட்டனர்.
தொடர்ந்து இந்தியர்கள் மீதான தாக்குதல் ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வருவது அங்குள்ள இந்தியர்களிடையே தொடர்ந்து பீதியை அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications