சங்கரராமன் கொலை-அப்ரூவர் ரவி சுப்பிரமணியமும் பல்டி'

புதுச்சேரி முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணராஜா விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று சாட்சிகள் விசாரணை நடந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேரில் அப்பு, ரகு, சுந்தரேச அய்யர், கதிரவன் உள்பட 13 பேர் ஆஜராகினர். ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 11 பேர் ஆஜராகவில்லை.
7 சாட்சிகளும் பல்டி:
காஞ்சி சங்கர மடம் அருகே வாகனங்களுக்கு டோக்கன் போடும் தட்சணாமூர்த்தி, கோவில் முன்பு கடை வைத்திருக்கும் மணிமாறன், இரும்பு கடை ஏழுமலை, டீக்கடை மணி, அச்சகம் நடத்தும் சரவணன், மற்றொரு டீக்கடை அருணாச்சலம், எஸ்.டி.டி. பூத் ஊழியர் ரீனா ஆகிய 7 பேரிடமும் சாட்சிகள் நேற்று விசாரணை நடந்தது.
இவர்களிடம் அரசு வக்கீல் தேவதாஸ் விசாரணை நடத்தினார். அப்போது போலீசாரின் வற்புறுத்துதலின் பேரிலேயே சம்பவத்தை நேரில் பார்த்தாகக் கூறியதாகவும், போலீசார் வெற்றுத் தாளில் தங்களிடம் கையெழுத்து வாங்கியதாகவும், அதில் அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் படங்கள் ஒட்டப்படவில்லை என்றும் கூறி 7 பேரும் திடீர் பல்டி அடித்தனர்.
இதையடுத்து ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர்கள் தினகரன், லட்சுமண ரெட்டி உள்ளிட்டோர் இந்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் இன்று அப்ரூவர் ரவி சுப்பிரமணியம், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் உள்பட 3 பேரிடம் சாட்சிகள் விசாரணை நடந்தது.
அதில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் அந்தர் பல்டி அடித்தார். போலீசார் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால் தான் ஜெயேந்திரருக்கு எதிராக வாக்குமூலம் தந்தேன் என்று கூறி தான் இதற்கு முன் கொடுத்த எல்லா வாக்குமூலத்தையும் அடியோடு மறுத்தார்.
இந்த வழக்கில் ஏற்கனவே 12 சாட்சிகள் பல்டி அடித்துவிட்ட நிலையில் மேலும் 7 சாட்சிகளும், அப்ரூவரும் பல்டி அடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெயேந்திரர்-மாதா அமிர்தானந்தமயி சந்திப்பு:
இந் நிலையில் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் தலைமையிடமான அமிர்தபுரியில், மாதா அமிர்தானந்தமயியை, ஜெயேந்திரர் சந்தித்துப் பேசினார்.
பின்னர், ஆசிரமத்தின் மத்திய மண்டபத்தில் கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் ஜெயேந்திரர் பேசுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பே மாதா அமிர்தானந்தமயியை சந்திக்க விரும்பினாலும் இன்றுதான் அது கை கூடியது. ஆதிசங்கரர் அவதரித்த புனித பூமியில் ஸ்ரீநாராயணகுரு மற்றும் சட்டம்பி சுவாமிகளுக்குப்பிறகு இன்று தர்மத்தைக் காக்க அமிர்தானந்த மயி அவதரித்துள்ளார்.
அனைத்து மதங்களின் சாரமும் ஒன்றே என்ற உண்மையை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு மதமும் வெவ்வேறு சின்னத்தின் மூலம் ஒரே இறைவனை உணர்த்துகின்றன. அந்த பரம்பொருளே ஒவ்வொருவருடைய இதயத்திலும் குடி கொண்டுள்ளது. மற்றவர்களுக்கு உதவுவது ஒவ்வொருவருடைய கடமையாகும். தமது உலகளாவிய சேவையின் மூலம் மாதா அமிர்தானந்தமயி இதனை நிருபிக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications