பொதுப்பணித் துறை பணிகளில் தேக்கம்: கருணாநிதி
சென்னை: பொதுப்பணித் துறையின் கீழ் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரகவிட்டார்.
பொதுப்பணித் துறையின் கீழ் நிறைவேற்றப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அப்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் ஆகியோர் உடன இருந்தனர்.
அப்போது வெலிங்டன் நீர்த்தேக்கத் திட்டம், மலட்டாற்றில் கட்டப்படும் நீர்த்தேக்கம், மத்தலப்பள்ளம் ஆற்றில் நடைபெறும் கண்மாய்ப் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும், உசிலம்பட்டி வட்டத்தில் 58 கிராமங்களுக்கு பாசனவசதி அளிக்க திட்டமிடப்பட்டு நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்கவும்,
காவிரி-குண்டாறு நதிகளை இணைத்திடும் திட்டத்தை 2011-ம் ஆண்டு ஜனவரிக்குள் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் உத்தரவிட்டார்.
மாநிலத்துக்குள் ஓடும் ஆறுகளை இணைக்கும் திட்டத்தின்கீழ் காவிரி-குண்டாறு நதிகளை இணைத்திட ரூ.189 கோடியில் மாயனூரில் காவிரியின் குறுக்கே கதவணை கட்டும் பணிகளில் ரூ. 46 கோடியில் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டப் பணிகளை 2011 ஜனவரிக்குள் முடிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
தாமிரபரணி ஆற்றினைக் கருமேனியாறு மற்றும் நம்பியாற்றுடன் இணைக்கும் ரூ. 369 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளில் ரூ. 18 கோடி அளவுக்குப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இத்திட்டப் பணிகளுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தி, பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு முடித்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
சென்னை மாநகர கழிவுநீர் வடிகால்களை மேம்படுத்துவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள ரூ. 633 கோடி மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்கவும், புதிய சட்டப் பேரவைக் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தினார்.
அண்ணா நூற்றாண்டு நினைவு மாநில நூலகக் கட்டடம், விழுப்புரம், திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டடங்களை விரைந்து முடிக்குமாறும், பெரம்பலூர், சிவகங்கை மாவட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டடப் பணிகளை உடனடியாகத் தொடங்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications