இலங்கை சபாநாயகரால் சஸ்பெண்ட் ஆன பூசாரி!
சீர்காழி: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோவில், வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு இலங்கை சபாநாயகர் லோகுபண்டாரா வந்தது குறித்து உரிய தகவலை அளிக்காததற்காக வைத்தீஸ்வரன் கோவில் பூசாரி அய்யப்பனை கோவிலை நிர்வகிக்கும் மட நிர்வாகிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் லோகு பண்டாரா ஜனவரி 9ம் தேதி வைத்தீஸ்வரன் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் வந்தார்.
இதை அறிந்ததும் மதிமுக, பெரியார் தி.க, நாம் தமிழர் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த தொண்டர்கள் திரண்டனர். லோகு பண்டாராவின் கார் மீது செருப்புகளை வீசித் தாக்கினர். இதில் லோகு பண்டாராவின் மகன் மீது செருப்பு பட்டதாக கூறப்பட்டது.
இதனால் பீதியடைந்த லோகு பண்டாராவை, போலீஸார் பாதுகாப்புடன் அங்கிருந்து கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த லோகு பண்டாரா, வேறு சில கோவில்களுக்கு செல்லவிருந்ததை ரத்து செய்து விட்டு திரும்பி விட்டார்.
தற்போது இந்த சம்பவத்தால் ஒரு பூசாரிக்கு வேலை போயுள்ளது.
வைத்தீஸ்வரன் கோவிலை நிர்வகித்து வரும் மடம், லோகு பண்டாரா வருகை குறித்து முன்கூட்டியே தெரிவிக்கத் தவறியதற்காக கோவில் பூசாரி அய்யப்பனை சஸ்பெண்ட் செய்துள்ளதாம். இந்த உத்தரவை வாய் மொழியாக அய்யப்பனுக்கு மடம் தெரிவித்துள்ளதாம்.
லோகு வந்தபோது அய்யப்பன்தான் பூசாரியாக இருந்தார். லோகு பண்டாராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அர்ச்சனை செய்து பிரசாதங்களையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications