'தூக்கி வளர்த்த கனிமொழி பெயரை விட்டுவிட்ட பாலு': கருணாநிதி
சென்னை: தான் தூக்கி வளர்த்த பிள்ளையான கனிமொழியின் பெயரைச் சொல்லாமல் விட்டு விட்டாரே டி.ஆர்.பாலு என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தாம்பரம் எம்.எல்.ஏ ராஜாவின் மகள் பவித்ரா- சித்தார்த்தன் திருமணம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்தது.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், இந்த மணவிழாவில் தம்பி டி.ஆர். பாலு வரவேற்புரை ஆற்றியிருக்கிறார். தனக்குள்ள உரிமையை அவர் பறித்துக் கொண்டார் என்று நம்முடைய துணை முதல்வர் தம்பி மு.க.ஸ்டாலின் சற்று வருத்தப்பட்டுக் கொண்டார். இருந்தாலும் அவரே அதற்கு ஆறுதலும் தேடிக் கொண்டார்.
ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரை ஆற்றியிருந்தால் எல்லோருடைய பெயரையும் கையில் வைத்துக் கொண்டு, ஒருவரை விடாமல் எல்லோருடைய பெயரையும் அவர் குறிப்பிட்டு வரவேற்றிருப்பார்.
ஆனால், தம்பி டி.ஆர். பாலு அதைப் பறித்துக் கொண்ட காரணத்தால் அவருடைய வரவேற்புரையிலே 'அவர்களே! இவர்களே" என்று சொல்லும்போது, 'கனிமொழி அவர்களே" என்பதை விட்டுவிட்டார்.
நான் கனிமொழியினிடத்திலே சொன்னேன். ''பார்த்தாயா அம்மா! தூக்கி வளர்த்த பிள்ளையை மறந்து விட்டார்'' என்று சொன்னேன். அது மாத்திரமல்ல, டெல்லியிலே அவரோடு இருக்கின்ற நம்முடைய டி.கே.எஸ். இளங்கோவனுடைய பெயரையும் டி.ஆர்.பாலு அவருடைய வரவேற்புரையிலே குறிப்பிட மறந்துவிட்டார்.
இப்படி தவறு செய்வதற்காகவே தானே வரவேற்புரை ஆற்றுகின்ற ஒரு வாய்ப்பைப் பெற்று அந்த இரண்டு பேருடைய பெயரையும் நான் சொல்கின்ற அளவிற்கு அவர் எனக்கு வைத்துவிட்டார் என்றாலும், அதற்காக நான் வருத்தப்படவில்லை. அதையும் பயன்படுத்திக் கொண்டு நான் உரையாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் கருணாநிதி.
ஸ்டாலின் தான் 'உற்சவர்': கனிமொழி:
முன்னதாகப் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ யசோதா, ''சிவனின் பாதி உமையவள். அதுபோல முதல்வரின் பாதியாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்'' என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கனிமொழி, சிவனின் பாதியைப் போல முதல்வரின் பாதியாக ஸ்டாலின் செயல்படுகிறார் என்று யசோதா கூறினார். அப்போது என் அருகில் இருந்த காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம், ''மனிதனின் பாதியாக யாரும் இருக்க முடியாது. வேண்டுமானால் உற்சவர், மூலவர்'' என்று கூறலாம் என்றார்.
அந்த வகையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை உற்சவர் என்றே குறிப்பிடலாம் என்றார்.












Click it and Unblock the Notifications