ஜெ. டெல்லி கிளம்பினார் - நாளை சோனியாவுடன் சந்திப்பு?

விழாவின்போது அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.
தேர்தல் ஆணையம் வைர விழா கண்டுள்ளது. இதையொட்டி நாளை டெல்லியில் விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் அழைத்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று ஜெயலலிதா நாளைய விழாவில் பங்கேற்கிறார்.
இதில் அனைவரும் எதிர்பார்ப்பது நாளை இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஜெயலலிதாவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சந்தித்துப் பேசுவார்கள் என்பதைத்தான்.
இருவரும் சந்தித்துப் பேசினால் அது தமிழக அரசியல் அரங்கில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தக் கூடும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
ஜெயலலிதாவுக்கும், சோனியாவுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதிதான் கடைசி முறையாக ஜெயலலிதாவும், சோனியாவும் சந்தித்துக் கொண்டனர். அதற்கு அடுத்த நாள்தான் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டார்.
ஏப்ரல் 15ம் தேதி நடந்த சோனியா, ஜெயலலிதா சந்திப்பு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்தது. புதிய அரசு அமைப்பது குறித்து இருவரும் அப்போது விவாதித்தனர். ஆனால் அதை நிராசையாகி விட்டது.
அதற்குப் பிறகு சோனியாவை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் ஜெயலலிதா. குறிப்பாக 2004ம் ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலின்போது சோனியா காந்தி வெளிநாட்டவர் என்ற பிரசாரத்தை பிரதானமாக முன்வைத்துப் பேசினார்.
இதன் காரணமாக இரு தலைவர்களுக்கும் இடையே நட்புறவு உருவாகாமல் போய் விட்டது. இந்த ஒரு பிரச்சினை காரணமாகவே, காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும் நெருங்க முடியாத நிலையும் ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை ஜெயலலிதாவும், சோனியாவும் ஒரே மேடையில் எதிர்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் விமானம் மூலம் ஜெயலலிதா டெல்லி புறப்பட்டுச் சென்றார். கிளம்புவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் ஆணைய வைர விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்கச் செல்கிறேன் என்றார்.
அப்போது செய்தியாளர்கள், சோனியா காந்தியை சந்திப்பீர்களா என்று கேட்டபோது, அதுகுறித்து பதிலளிக்க விரும்பவில்லை. இப்போது எதுவும் கூற முடியாது என்றார் ஜெயலலிதா.
2 நாட்கள் அவர் டெல்லியில் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது. அங்கு பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவுடன் தோழி சசிகலா, உதவியாளர்கள், பாதுகாப்பாளர்கள் உடன் சென்றனர்.
விழாவில், சோனியா காந்தி, சரத் யாதவ், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, பிரணாப் முகர்ஜி, எல்.கே.அத்வானி, பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன் ஆகியோருடன் முன் வரிசையில் ஜெயலலிதாவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கருணாநிதி போகவில்லை...
இதற்கிடையே, முதல்வர் கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் முதல்வரால் டெல்லி செல்ல முடியாத நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதிக்குப் பதில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக இன்று மாலை அவர் டெல்லி கிளம்பிச் செல்கிறார்.












Click it and Unblock the Notifications