பொன்சேகாவுக்கு சந்திரிகா திடீர் ஆதரவு

இப்போதைய அதிபரான மகிந்த ராஜபக்சேவின் கட்சியைச் சேர்ந்தவரான சந்திரிகா, எதிர்க் கட்சியைச் சேர்ந்த பொன்சேகாவுக்கு ஆதகவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பையும் அந் நாட்டு அரசியலில் பெரும் திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது ராஜபக்சேவுக்கு அரசியல்ரீதியாக பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
சந்திரிகா குமாரதுங்காவை நிதாம்புவா நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று பொன்சேகா சந்தித்தார். அப்போது
பொன்சேகாவுக்கு ஆதரவைத் தெரிவித்து சந்திரிகா கூறுகையில்,
இலங்கையில் இப்போது நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவும், தேர்தல் தொடர்பான வன்செயல்களும் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
மரபுகளுக்கும், அடிப்படை சுதந்திர உணர்வுகளுக்கும் பெரிய ஆபத்து உருவாகியுள்ளது. இதுநாள் வரை பெருத்த தியாகங்களுக்கு இடையே நாம் கட்டிக்காத்துவந்த ஜனநாயக மரபுகளும் உரிமைகளும் கட்டிக்காக்கப்பட வேண்டும்.
ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஜனநாயக நெறிமுறைகளைவிட வேறு விதமான அரசு முறையால் மக்களுக்கு நன்மைகளைச் செய்துவிட முடியாது என்றே நம்புகிறோம். எனவே இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளால் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பொன்சேகாவை ஆதரிக்கிறேன் என்றார்.
எந்தக் கட்சியையும் சாராத பொன்சேகாவுக்கு தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழர்கள் சார்பில் அதிபர் பதவிக்கு சிவாஜி லிங்கம் போட்டியிட்டாலும் தேர்தலில் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால், அவருடைய போட்டியால் தமிழர்களின் வாக்குகள் சிதையும்.
இலங்கையில் மொத்தம் 1 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நாளை நடக்கவுள்ள தேர்தலில் இனப் பிரச்சனையைவிட விலைவாசியும் சட்டம், ஒழுங்கு சீர்குலைவும்தான் மிகப் பெரிய பிரச்சனையாகத் திகழ்கிறது.
நாளை நடைபெறும் வாக்குப் பதிவின்போது எந்த அசம்பாவிதச் சம்பவமும் நேரிடாமல் தடுக்க 70,000 போலீஸாரும் ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications