ஹால்டிராம் உரிமையாளர் மீது கொலை குற்றச்சாட்டு: உறுதி செய்தது கோர்ட்
கோல்கத்தா: டீக்கடைக்காரர் கொலை வழக்கில் ஹால்டிராம் நிறுவனத்தின் உரிமையாளர் பிரபு சங்கர் அகர்வால் மற்றும் 4 பேர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
பிரபல உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான 'ஹால்டிராம்' உரிமையாளர் பிரபு சங்கருக்கு கோல்கத்தாவில் பூராபஜார் பகுதியில் ஹோட்டல் ஒன்று உள்ளது.
பிரபலமான இந்த 'செயின் ஹோட்டல்' வாசலில் பிரமோத் சர்மா என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். டீக்கடை காலி செய்யுமாறு சர்மாவிடம் பிரபு சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
சர்மா கடையை காலி செய்ய மறுத்ததால் கூலிப்படையை ஏவி சர்மாவை கொலை செய்ய திட்டமிட்டார் பிரபு சங்கர்.
இதன்படி கோபால் திவாரி, ராஜா சங்கர், மனோஜ் தாக்கூர் மற்றும் அருண் காண்டேல்வெல் ஆகிய நால்வரிடம் பணம் கொடுத்து சர்மாவை தீர்த்துக்கட்ட அனுப்பினார் பிரபு சங்கர்.
கடந்த 2005ம் ஆண்டு மார்ச் மாதம் டீக்கடைக்காரர் சர்மாவை அவரின் வீட்டுக்கே சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு கூலிப்படையினர் தப்பியோடிவிட்டனர்.
குண்டடி பட்டும் உயிர் பிழைத்துக் கொண்ட சர்மா பிரபு சங்கர் மீது வழக்கு தொடர்ந்தார். போலீசார் விசாரணை நடத்தி கூலிப்படையினரை பிடித்தனர்.
கூலிப்படையினர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹால்டிராம் உரிமையாளர் பிரபுசங்கரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கோல்கத்தா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடித்து பிரபு சங்கர் மற்றும் நான்கு பேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.
இவர்களுக்கான தண்டனை வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications