நடிகை ரோகிணி கோரிக்கை ஏற்பு - பி.டி கத்திரிக்கு தமிழக அரசு தற்காலிக தடை
சென்னை: நடிகை ரோகிணி தலைமையிலான குழுவினர் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மரபணு மாறறம் செய்யப்பட்ட கத்திரிக்காயை வளர்க்கவோ, விற்கவோ கூடாது என்று தமிழக அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதிய உணவுப்பயிர்கள் சமீப காலமாக உலகின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை, பூச்சிகளால் அதிகம் தாக்கப்படுவதில்லை என்றும், அதிக மகசூலை தருகின்றன என்று ஒரு கருத்தும் பரவலாக நிலவி வருகிறது.
ஆனால், இயற்கை உணவை ஆதரிப்பவர்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகள், சுகாதாரக் குறைபாட்டை ஏற்படுத்தும், விவசாயிகளை பெருமளவில் பாதிக்கும் என்றும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.கத்தரிக்காய் ரகத்தை அறிமுகம் செய்வது பற்றிய பேச்சு எழுந்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் நடிகை ரோகிணி, சினிமாத்துறையினர், டாக்டர்கள், விவசாயிகள், நுகர்வோர், மகளிர் அமைப்பினர் என பலதரப்பினர் இணைந்து உருவாக்கியுள்ள பாதுகாப்புக்கான உணவுக்கான கூட்டமைப்பின் பிரதிநிதிகள், முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்கள்.
தமிழகத்தில் மரபணு மாற்று கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என்று கோரி மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில், பூவுலகின் நண்பர்கள்' அமைப்புத் தலைவர் டாக்டர் சிவராமன், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் செல்வம், நிர்வாகி டாக்டர் ஜீவானந்தம், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் நடிகை ரோகிணி, சங்கீதா, ராம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழுத் தலைவர் ஷீலு ஆகியோர் சந்தித்து, தமிழ்நாட்டில் மரபணு மாற்று கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.
அவர்களின் மனுவினை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் கருணாநிதி, அது பற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றும், வேளாண்மைத்துறை அமைச்சர் இது குறித்து சட்டப்பேரவையில் விளக்கமாகக் கூறி உள்ளார் என்றும் சுட்டிக்காட்டியதுடன், எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும் வரையில், இதனை (பி.டி.கத்தரிக்காய்) விற்கவோ, பயிரிடவோ அனுமதிக்கக்கூடாது என்று கூறியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications