'தலித்களை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தும் கம்யூ'-வி.சி
கடலூர்: தலித் மக்களை அரசியல் லாபத்துக்கு இடது சாரிகள் பயன்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்தார்.
கடலூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் சொந்த ஊரான பாளையங்கோட்டை காலனிக்கு மினிலாரியில் திரும்பிச் சென்ற போது குறிஞ்சிப்பாடி அருகே மினிலாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானார்கள். இந்த விபத்தில் மூன்று பேர் பலியானார்கள், 20 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பாளையங்கோட்டை காலனியைச் சேர்ந்த பொதுமக்களிடம் உங்களுக்கு தொகுப்பு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது, அதனால் நீங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கையெழுத்து போட்டால் கிடைக்கும் என்று பொய்யான தகவலை கூறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அவர்களை கடலூருக்கு அழைத்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர்.
அதோடு அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் 50 ரூபாய் கட்டாயமாக வசூலித்து உள்ளனர். ஆர்ப்பாட்டம் முடிந்து திரும்பி செல்லும் போது தான் இந்த விபத்து நடந்துள்ளது.
எனவே, இந்த விபத்து சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தான் காரணம். அதனால், இதற்கு தார்மீக பொறுப்பேற்று விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்வர வேண்டும்.
பொய்யான வாக்குறுதிகளை கூறி அப்பாவி தலித் மக்களை தங்கள் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவது கண்டனத்திற்கு உரியது.
இனால், இடதுசாரி கட்சிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிப்ரவரி மாதம் 8ம் தேதி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications