ராணுவப் புரட்சிக்கோ, வேறு எதற்குமோ நான் சதி செய்யவி்ல்லை - பொன்சேகா
கொழும்பு: ராணுவப் புரட்சிக்கு நான் சதி செய்யவில்லை. இதுதொடர்பாக ஹோட்டலில் இருந்தபடி எந்தத் திட்டத்தையும் தீட்டவில்லை என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ராணுவப் புரட்சிக்கு சதி செய்ததாகவும், ராஜபக்சேவையும், அவரது குடும்பத்தினரையும் கொல்லத் திட்டமிட்டதாகவும் பொன்சேகா மீது இலங்கை அரசு பயங்கர குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
இதற்கு பொன்சேகா திட்டவட்டமான மறுப்பைத் தெரிவித்துள்ளார். நேற்று மாலை செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அதிபர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் இருந்து இந்த திட்டத்தை நான் வகுத்ததாக அரசாங்கம் நினைக்கிறது. எனினும் நான் அப்படி ஒரு திட்டத்தை தீட்டவில்லை.
என்னை ஒரு முட்டாள் போல அரசு நினைத்துக் கொண்டுள்ளது. அதிபர் மாளிகைக்கு அருகில் உள்ள ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு சதித் திட்டம் தீட்டும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல.
ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் என்னை சித்திரவதை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டிருந்தது. பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் எனது வீட்டையும் எதிர்க்கட்சி தலைவரின் வீட்டையும் சோதனையிடுவதற்கும் எனது பாஸ்போர்ட்டை தடைசெய்வதற்கும் என்னையும் எனது மருமகனையும் ரகசிய போலீஸாரின் முன்னிலையில் ஆஜர்செய்வதற்கும் திட்டமிடப்பட்டது.
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் நான் வெற்றிப்பெற்ற போதும் அந்த முடிவுகள் அழிக்கப்பட்டன.
நம்பிக்கையான தகவலின் அடிப்படையில், முதல் கட்ட வாக்கு எண்ணும் பணிகளின் போது நான் ராஜபக்சேவை விட 14 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்தேன். ஆனால் இதை அப்படியே ராஜபக்சேவுக்கு மாற்றப்பட்டு விட்டது.
வடக்கு - கிழக்கு மற்றும் தென்னிலங்கையில் வாக்காளர்கள் எனக்கு அளித்த வாக்குகளை மாற்றியமைத்து காட்டியுள்ளனர். இது நாட்டில் மீண்டும் பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்கும்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பவும் நீதிமன்ற நடவடிக்கையை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தலிலும் நான் போட்டியிடுவேன். அத்தேர்தலிலும் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டியிடுவேன். மக்களுக்கு வழங்கிய நம்பிக்கையான மாற்றம் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகப் போவதில்லை.
எனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வெறும் நான்கு போலீஸ்காரர்கள் மட்டுமே பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி எனக்கு 70 பேர் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட வேண்டும். ஆனால் நாட்டின் ஜனாதிபதி நாட்டின் சட்டத்தை மதிக்கவில்லை என்றார் அவர்.
அப்போது உடன் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர கூறுகையில், அனுராதபுரம், மாத்தளை, புத்தளம் ஆகிய இடங்ளில், உள்ள மாவட்ட செயலகங்களில் வாக்கு எண்ணுபவர்கள் பலர் துரத்தப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் வாக்குப் பெட்டிகளை பாதுகாக்க முடியாமல் போய் விட்டது.
தேர்தல்கள் ஆணையாளரின் தலைக்கு குறிவைத்து துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தப்பட்டதாக எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு முதல் தடவையாக தேர்தல் ஆணையாளரின் கையொப்பமில்லாமல் தேர்தல் முடிவுகள் மின் அஞ்சலில் அனுப்பப்பட்டு வாசிக்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் சமரவீரா.












Click it and Unblock the Notifications