அகதிகளுக்காகப் போராடிய தமிழர்கள் கைது- இந்தோனேசியாவுக்கு கண்டனம்
ஜகார்தா: இந்தோனேசியாவின் மேரக் நகரில் கப்பலி்ல் தவித்து வரும் தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சாரதா நாதன், ஜெசிகா, பமீலா ஆகியோரை இந்தோனேசிய அரசு கைது செய்துள்ளதற்கு உழைக்கும் மக்கள் அமைப்பின் சர்வதேசப் பிரிவு தலைவர் இகின் மகேந்திரா கண்டனம் தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து மகேந்திரா கூறுகையில், உடனடியாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர் என்பதற்கு அரசு விளக்கம் தர வேண்டும்.
அப்பாவித் தமிழர்களை கப்பலில் தவிக்க விட்டு விட்டு, அவர்களை வைத்து ஆஸ்திரேலிய அரசிடமிருந்து பெரும் பணத்தைக் கறக்கும் முயற்சியில் இந்தோனேசிய அரசு ஈடுபட்டுள்ளது. இது மிகவும் அவமானகரமான ஒன்றாகும் என்றார்.
இதேபோல மேரக் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக போராடி வரும் தமிழ் சாலிடாரிட்டி அமைப்பும் இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ளது.
கடந்த 100 நாட்களுக்கும் மேலாக கப்பலில் தவித்தபடி உள்ளனர் அகதிகளாக அந்தஸ்து கோரி போராடி வரும் தமிழர்கள். இவர்களில் ஒருவர் உடல் நலம் குன்றி இறந்து விட்டார். பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
ஆனால் இவர்களுக்கு எந்தவிதமான விமோச்சனமும் பிறப்பதாக தெரியவில்லை. இந்த நிலையில்தான் தமிழர்களைக் காக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.
ஆனால் இவர்களை தற்போது கைது செய்யத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications