மீண்டும் தள்ளிப் போகிறது 3 ஜி ஏலம்-அரசுக்கு ரூ.35,000 கோடி வருவாய் பாதிப்பு!
இந்த நிதியாண்டில் மத்திய அரசுரக்கு வரவேண்டிய ரூ.35,000 கோடி தள்ளிப் போயிருக்கிறது... காரணம் 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் உரிய காலத்தில் நடக்காததுதான்!
இந்த மாதம், அடுத்த மாதம் என தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வந்தது 3 ஜி எனப்படும் அடுத்த தலைமுறைக்கான தொலைபேசி அலைக்கற்றை ஏலம்.
இந்த ஏலம் எப்படி விட வேண்டும், எவ்வளவு அடிப்படை ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும் போன்றவற்றை தொலைத் தொடர்பு அமைச்சகம் மட்டும் நிர்ணயிக்காமல், நிதியமைச்சர் உள்ளிட்ட 5 துறை அமைச்சர்கள் பிரதமர் ஆலோசனையுடன் நிர்ணயிப்பார்கள் என மாற்றியமைக்கப்பட்டது.
இதில் பெரும் இழுபறி நிலவியது. ஒருவழியாக குறைந்தபட்ச ஏலத் தொகையை நிர்ணயித்தாலும், பாதுகாப்பு அமைச்சகம், எல்லைப் புறங்களில் அலைக் கற்றைகள் பரவாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட கால அவகாசம் கேட்க, அதிலும் கால தாமதம் ஏற்பட்டது.
ஒருவழியாக எல்லாம் முடிந்து இந்த பிப்ரவரி அவல்லது மார்ச் மாதமே 3 ஜி ஏலத்தை முடித்து அரசுக்கு வரவேண்டிய ரூ 35000 கோடியை வசூலித்துவிடுவோம் என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ ராசா கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
ஆனால் இப்போது 3 ஜி ஏலமே இந்த நிதியாண்டு நடைபெறாது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையான காரணம் என்ன?
"உண்மையில் பாதுகாப்புத் துறை இன்னமும் எல்லைப் புறங்களில் ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றைகளைத் தடுத்து நிறுத்தும் பணியை முற்றிலும் செய்து முடிக்கவில்லை. இது நமது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் அந்தப் பணியை முழுமையாக முடிக்கும் வரை 3 ஜி ஏலம் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது. காத்திருக்கத்தான் வேண்டும். எப்படியும் இந்த ஆண்டு மத்தியில் ஆகஸ்ட்-செப்டம்பருக்குள் இந்தப் பணி முடிந்து விடும் எனத் தெரிகிறது... அதன் பிறகுதான் 3 ஜி ஏலம்" என்கிறார்கள் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள்.
இதுகுறித்து இன்னமும் தொலைத் தொடர்புத் துறை மற்றும் நிதித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 3ஜி ஏலத்துக்கு தலைமை வகிப்பவர் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே மொத்த உற்பத்தியில் 6.8 சதவீதம் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு நிதித் துறை தத்தளித்துக் கொண்டுள்ளது. இந்த சூழலில் குறித்த காலத்தில் 3 ஜி ஏலம் நடக்காததால் அரசுக்கு வரவேண்டிய ரூ.35.000 கோடி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு பட்ஜெட்டில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications